பொருளாதார மந்தத்துக்கு நடுவிலும் அட்டகாசமான வளர்ச்சி!
டெல்லி: உலகெல்லாம் பொருளாதாரம் வீழ்ந்துவிட்டது, வேலை போச்சு... என்ற விசும்பல்கள் ஒலித்தாலும், தொலைபேசி நிறுவனங்கள் மட்டும் 'கோயிங் ஸ்டெடி' என்கின்றன புன்முறுவலுடன். அதுவும் இந்தியாவில்தான் இந்த நிலை.
எப்படி... எப்படி இது சாத்தியம்?
சிம்பிள்... வேலை போனாலும் செல்போன் அல்லது டெலிபோனை தூக்கியெறிய முடியாத, ஒரு வித 'போதை மற்றும் வசதி'தான் இதற்குக் காரணம் என்கிறார்கள் நிபுணர்கள்.
பொருளாதார தள்ளாட்டம் பெருமளவில் உள்ள இந்த காலகட்டத்தில் மட்டும் ஒரே மாதத்தில் 15 மில்லியன் மக்கள் புதிய செல்போன் அல்லது தொலைபேசி உபயோகிப்பாளராக மாறியுள்ளனர். அதோ சமயம் ஏற்கெனவே உபயோகித்துக் கொண்டிருந்தவர்களும் அந்த இணைப்புகளைத் துண்டித்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் 10.66 மில்லியனாக இருந்த தொலைபேசி பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை, அடுத்த ஒரே மாதத்தில் கூடுதலாக 15.26 மில்லின்களாக உயர்ந்துள்ளது.
இது குறித்து தொலைபேசிக் கட்டண ஒழுங்குமுறை ஆணையம் டிராய் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்த ஜனவரியில் மட்டும் 15.4 மில்லியன் புதிய செல்போன் சந்தாதாரர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். லேண்ட் லைன் உபயோகிப்பாளர்கள் 1 லட்சத்து 48 ஆயிரம் பேர் புதிதாக இணைப்பு பெற்றுள்ளனர்.
இதன் மூலம் இந்தியாவெங்கும் செல்போன் மற்றும் லேண்ட் லைன் உபயோகிப்பாளரின் எண்ணிக்கை 40 கோடியாக உயர்ந்துள்ளது.
செல்போன் மற்றும் கம்பியில்லா தொலைபேசிகள் வழங்குவதில் ரிலையன்ஸ் நிறுவனம் நாட்டிலேயே முதலிடம் வகிக்கிறது. இந்த நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் 8.1 சதவிகிதமாகும். சமீபத்தில் மிக அதிக அளவு ஜிஎஸ்எம் மொபைல்களை இந்த நிறுவனம் வழங்க ஆரம்பித்திருப்பதும் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.
ஐடியா (5.3), ஏர்செல் (4.3), வோடபோன் மற்றும் ஸ்பைஸ் (4.00), பார்தி ஏர்டெல் (3.2) ஆகியவை ரிலையன்சுக்கு அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
அரசு நிறுவனமான பிஎஸ்ன்எல்லின் நிலை என்ன என்பது குறித்து டிராய் அறிக்கையில் தகவல் ஏதுமில்லை.