மின் நிலைய விழா-தூத்துக்குடி வருகிறார் பிரணாப்
தூத்துக்குடி: இலங்கைப் பிரச்சினை தமிழகத்தில் சூடு பிடித்த பின்னர், மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடித்த பின்னர் முதல் முறையாக மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தமிழகம் வருகிறார்.
தூத்துக்குடியில் தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சொந்தமான அனல்மின் நிலையம் அருகே புதிதாக தலா 500 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 2 யூனிட்கள் கொண்ட அனல் மின் நிலையத்தை அமைக்க நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும், தமிழ்நாடு மின்வாரியமும் கூட்டாக முடிவு செய்தன.
இந்த கூட்டு நிறுவனத்துக்கு என்.எல்.சி- தமிழ்நாடு பவர் லிமிடெட்' என பெயரிடப்பட்டு உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 75 சதம் தமிழகத்தின் தேவைக்கும், 25 சதம் மற்ற தென்மாநிலங்களுக்கும் வழங்கப்படும்.
இந்த நிலையத்துக்கு தேவையான நிலக்கரியை ஒரிசா மாநிலத்தில் உள்ள டால்ச்சர் சுரங்கத்தில் இருந்து கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி துறைமுகத்துக்கு சொந்தமான 108 எக்டர் நிலப்பரப்பில் இந்த அனல் மின் நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 28-ந் தேதி தூத்துக்குடியில் நடக்கிறது.
இந்த விழாவுக்கு மத்திய நிலக்கரி துறை இணை அமைச்சர் சந்தோஷ்குமார் பக்ருடியா தலைமை தாங்குகிறார். மத்திய வெளியுரவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அடிக்கல் நாட்டுகிறார்.
இலங்கைப் பிரச்சினை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்த பின்னர் பிரணாப் தமிழகம் வருவது இதுவே முதல் முறையாகும். சமீபத்தில் கொழும்பு சென்றபோது கூட அவர் சென்னைக்கு வராமல் அப்படியே டெல்லி போய் விட்டார்.
இந்த நிலையில் தூத்துக்குடிக்கு பிரணாப் முகர்ஜி வருகிறார். தமிழகத்தில் இலங்கைப் பிரச்சினை தொடர்பாக பெருமளவில் போராட்டங்கள் நடந்து வருவதால் அவரது நிகழ்ச்சிக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.
தனது தமிழக வருகையின்போது சென்னை வந்து முதல்வர் கருணாநிதியை பிரணாப் முகர்ஜி சந்திக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications