சினிமா நட்சத்திரத்தால் வீழ்த்தப்பட்ட முதல் தலைவர் வாஜ்பாய்
பல்ராம்பூர்: சினிமா நட்சத்திரங்களின் செல்வாக்கால் வீழ்த்தப்பட்ட முதல் தலைவர் என்ற பெருமை முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கே உண்டு.
இது தேர்தல் காலம். அரசியல்வாதிகளுக்குப் போட்டியாக சினிமாக்காரர்களும் தேர்தல் களத்தில் சரமாரியாக புகுந்து கொண்டிருக்கின்றனர். பெரிய பெரிய அரசியல் கட்சிகள் செல்வாக்கு உடைய சினிமா நட்சத்திரங்களையும், திரையுலகினரையும் வளைத்து வளைத்து தங்களது கட்சியில் இணைத்து வருகின்றனர்.
இப்போது கிரிக்கெட் வீரர்களையும் கூட சேர்த்து இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சினிமா நட்சத்திரத்தின் செல்வாக்கால் வீழ்த்தப்பட்ட முதல் தலைவர் யார் தெரியுமா?. நம்ம வாஜ்பாய்தான்.
அந்த வரலாறு படைக்கப்பட்ட ஆண்டு 1962. 60களில் புகழ் பெற்ற சினிமா ஸ்டாராக விளங்கிய பிரபல இந்தி நடிகர் பால்ராஜ் சஹானியின் செல்வாக்கை வைத்து வாஜ்பாயை வீழ்த்தினார் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு.
யாருமே அறிந்திராத புதுமுகமான சுபத்ரா ஜோஷி என்ற பெண் வேட்பாளரிடம், அந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார் எம்.பியாக இருந்த வாஜ்பாய்.
அப்போது பாரதிய ஜன சங்க வேட்பாளராக போட்டியிட்டார் வாஜ்பாய். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் டெல்லியைச் சேர்ந்தவரான சுபத்ரா ஜோஷியை நிறுத்தினார் நேரு.
பிரபல தலைவர் என்பதால் வாஜ்பாயே வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சாதுரியமாக செயல்பட்ட நேரு, பாலிவுட்டின் பிரபல நடிகரான பால்ராஜ் சஹானியை பிரசாரத்திற்கு வரவழைத்தார்.
அவருடன் பிரபல உருதுக் கவிஞரும், அப்போதைய ராஜ்யசபா உறுப்பினருமான பேகல் உத்சாகியையும் அனுப்பி வைத்தார்.
அதன் பிறகு நடந்ததை உத்சாகியே கூறுகிறார் ..
சஹானியையும், என்னையும் வாஜ்பாய்க்கு எதிரான பிரச்சாரப் பணிக்கு நியமித்தார் நேரு.
எனது வீட்டில் 2 நாட்கள் தங்கியிருந்து பிரசாரம் செய்தார் சஹானி. இதன் மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டது. அரசியலில் அறிமுகமே இல்லாத ஒரு வேட்பாளரான சுபத்ரா ஜோஷி, எம்.பியாக இருந்த வாஜ்பாயைத் தோற்கடித்தார்.
சஹானியின் சினிமா பிரபலம்தான் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
தேர்தல் பிரசாரத்தின்போது பல்ராம்பூர் என்ற சிறிய ஊரில் கூட 15 ஆயிரத்திற்கும் மேலானவர்கள் திரண்டு வந்து சஹானியைப் பார்க்கவும், பேச்சைக் கேட்கவும் கூடினர். அது எங்களுக்கே ஆச்சரியமாக இருந்தது. காரணம், காங்கிரஸ் தலைவர்களுக்குக் கூட அவ்வளவு கூட்டம் அப்போது கூடவில்லை என்பதால் என்றார் உத்சாகி.
இப்படி பெரிய அரசியல் தலைவரை சாதுரியமாக செயல்பட்டு தோற்கடிக்கும் செயல் வடக்கில் மட்டும் இல்லை, தெற்கிலும் இருந்தது என்பதற்கு பெருந்தலைவர் காமராஜரின் தோல்வியும் ஒரு உதாரணம்.
சாதாரணமானவரான சீனிவாசனை நிறுத்தி விருதுநகரில் காமராஜரை அப்போது அண்ணா தோற்கடித்தார் என்பது நினைவிருக்கலாம். அதே கதைதான் வாஜ்பாய்க்கும் அப்போது நேர்ந்துள்ளது.
இருப்பினும், 'ஸ்டார் பவரால்' வீழ்த்தப்பட்ட முதல் அரசியல்வாதி என்ற பெருமை வாஜ்பாயையே சேரும்!












Click it and Unblock the Notifications