எச்.பியில் ஆள்குறைப்பு, சம்பள குறைப்பு...!
நிதி நெருக்கடி, லாபம் குறைவு போன்ற காரணங்களால் தங்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 25,000 பேரைக் குறைக்கப் போவதாக கடந்த அக்டோபரில் அறிவித்தது. சொன்னது போலவே, இந்த 25,000 பேரில் முதல் கட்டமாக 9,000 பணியாளர்களை நீக்கியுள்ளது எச்பி. மீதியுள்ள 16,000 பேரும் படிப்படியாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள்.
இப்போது அடுத்த அதிரடியாக, பணியில் உள்ள அனைவருக்கும் சம்பளக் குறைப்பை அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் எச்பியின் லாபம் 13 சதவீதம் குறைந்துள்ளது தெரிய வந்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு முதல் காலாண்டில் லாபத்தில் 2.133 பில்லியன் டாலர்கள் குறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து சம்பளக் குறைப்புகளை அறிவித்துள்ளது.
நிறுவன செலவுகளைக் கட்டுப்படுத்த இனிமேலும் ஆட்களைக் குறைக்காமல் சம்பளத்தைக் குறைப்பது நிறுவனத்தின் நற்பெயரை பாதிக்காமல் இருக்கும் என்பதால் இந்த முடிவு என அதன் சிஇஓ மார்க் ஹர்ட் அறிவித்துள்ளனர்.
இந்த சம்பளக் குறைப்புக்கு முன்னுதாரணமாக தாமே இருக்க விரும்புவதாகவும் அறிவித்துள்ள மார்க், தனது சம்பளத்தில 20 சதவீதம், அதாவது 2.90 லட்சம் டாலர்களைக் குறைத்துக் கொள்ள முன்வந்துள்ளார். இவரது மொத்த ஆண்டு சம்பளம் 14.50 லட்சம் டாலர்கள்.
இது சர்வ நிச்சயமாக மோசமான சூழல்தான். ஆனால் இந்த நிலைக்கு யாருமே தப்ப முடியாது. எங்கள் போட்டியாளர்கள் ஐபிஎம் உள்பட பலருக்கும் இதே நிலைதான் இப்போது ஏற்பட்டுள்ளது என்கிறார் மார்க்.
எச்பியின் இந்த தடுமாற்றங்கள், லாபக் குறைவு போன்ற விவரங்கள் வெளியான பிறகு இதன் பங்குகள் விலை 6.4 சதவீதம் குறைந்து, 32.02 டாலர்களாகிவிட்டது.