சிட்டி வங்கியை முந்திய ஸ்டேட் பேங்க்
முன்பு சிட்டி குரூப்பின் மொத்த சொத்து மதிப்பு ரூ.9,72,075 கோடிகள். ஆனால் பொருளாதாரம் அடிவாங்கிப் போய், வங்கி அமைப்பு முறையே கேள்விக்குறியதாகிவிட்ட இன்றைய சூழலில் இந்த வங்கியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.57,328 கோடியாக சரிந்துவிட்டது.
ஆனால் இந்தியாவின் எஸ்பிஐக்கு உள்ள சொத்துக்கள் இதைவிட அதிகம். அதாவது ரூ.66,449 கோடிகள்.
கடந்த 2008ம் ஆண்டு மட்டும் சிட்டி வங்கிக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் ரூ.80,000 கோடி என்கிறது அந்த நிறுவனத்தின் செய்திக் குறிப்பு. ஆனால் எஸ்பிஐயோ ரூ.4,700 கோடி வரை லாபம் சம்பாதித்துள்ளது.
சிட்டி குரூப் நிறுவன பங்கு மதிப்பு அதன் சரித்திரத்திரத்திலேயே இல்லாத அளவுக்கு படுபாதாளத்துக்குப் போய்விட்டது. கிட்டத்தட்ட 93 சதவிகிதம் குறைந்து 1.95 டாலருக்கு வந்துவிட்டது. ஒரு காலத்தில் 65 டாலர்கள் வரை விற்பனையான பங்கு இது.
இந்த ஒரு வங்கிக்குதான் இப்படியொரு மோசமான நிலை என்று நினைத்துவிட வேண்டாம். அமெரிக்காவின் நம்பர் ஒன் வங்கி எனப்பட்ட பாங்க் ஆப் அமெரிக்காவின் பங்குகள் 2.53 டாலராகக் குறைந்து, அந்த வங்கியை ஆட்டம் காண வைத்துள்ளது.
வங்கித் துறையில் இன்னும் ஒரு மீட்சி நிலை ஏற்படாதது ஒபாமா அரசை கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. மக்கள் முழுதுமாக நம்பிக்கை இழக்குமுன் இந்த வங்கிகளின் அரசுக்கு உள்ள பங்கின் அளவை பெருமளவு உயர்த்தி, புதிய மூலதனத்தைச் செலுத்த முடிவு செய்துள்ளது.
ஏற்கெனவே 45 பில்லியன் டாலர் அளவுக்கு இந்த வங்கிக்கு நிதி உதவி செய்துள்ளது அமெரிக்க அரசு (சும்மா இல்ல... சிட்டி வங்கியின் 300 பில்லியன் மதிப்புள்ள சொத்துக்களின் அடிப்படையில்). இப்போது மேலும் கூடுதல் நிதியைத் தரப் போகிறது.
ஆனால் எஸ்பிஐக்கு இந்த சிக்கலே கிடையாது. அரசுக்கே கடன் தந்து உதவும் அளவுக்கு ரொம்ப ஸ்ட்ராங்கான நிலையில் உள்ளது அந்த வங்கியின் செயல்பாடும் நிதிக் கட்டமைப்பும். எஸ்பிஐயின் பங்குகளை வைத்திருப்பதை இப்போதும் பெருமைக்குரியதாகக் கருதுகின்றனர் முதலீட்டாளர்கள்.
இதற்குக் காரணம், இன்றைய அரசுகள் எதுவுமில்லை. தொலைநோக்குப் பார்வையோடு இந்த வங்கியை 'அரசின் வங்கி'யாக்கி, தனியாரின் கையை ஓங்கவிடாமல் செய்த இந்தியாவின் முன்னாள் நித நிர்வாகிகள்தான் என்பதை நிச்சயம் நன்றியோடு நினைவு கூற வேண்டும்!.