தூத்துக்குடி துறைமுக பணிகளுக்கு ரூ.312 கோடி
டெல்லி: தூத்துக்குடி துறைமுக வளர்ச்சி பணிக்கு மத்திய அமைச்சரவை ரூ 312 கோடி ஒதுக்கியுள்ளது. இதன்மூலம் சரக்கு போக்குவரத்துக்கு உதவும் வகையில் மேலும் ஒரு கன்டெய்னர் தளம் அமைக்கப்படும் என தெரிகிறது.
வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சர்களின் பொருளாதார விவகார குழுவின் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. இக்கூட்டத்தின் போது பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து ஆராயப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில்,
தூத்துக்குடி துறைமுக வளர்ச்சி பணிக்கு பொருளாதார விவகார குழு ரூ 312 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த பணத்தில் தூத்துக்குடியில் சரக்கு போக்குவரத்தை அதிகரிக்க 8வது கன்டெய்னர் தளம் அமைக்கப்படும்.
இதற்கான பணிகள் விரைவில் துவக்கப்பட்டு அவை 21 மாதங்களில் முடிவடையும். புதிய தளம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் தூத்துக்குடி துறைமுகத்தில் ஆண்டுக்கு கூடுதலாக 6 லட்சம் கன்டெய்னர்களை இயக்க முடியும்.
ஏழாவது தளம் தனது அதிகபட்ச திறனான 4.7 கன்டெய்னர்களை முழுவீச்சில் இயக்கி வருகிறது. 8வது தளத்துக்கான வேலை முடிந்தவுடன் நேரமும், செலவும் மிச்சப்படும். வேலைகள் துரிதமாக நடக்கும்.
இதன்மூலம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அதிகரிக்கும். புதிய வேலைவாய்ப்புகளும் ஏற்படும் என்றார் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications