வன்னி-12 சிறார்கள் உள்பட 32 தமிழர்கள் படுகொலை
வலைஞர்மடம், பொக்கணை ஆகிய மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளில் திங்கட்கிழமை காலை 5.30 மணிக்கும் பின்னர் மாலை 3.30 மணிக்கும் இரு முறை எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் 12 சிறுவர்கள் உட்பட 32 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 49 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 12 சிறுவர்களும் அடங்குவர்.
புதுக்குடியிருப்புக்குள் நுழைந்தது ராணுவம்?:
இதற்கிடையே விடுதலைப் புலிகள் வசம் உள்ள புதுக்குடியிருப்பு நகருக்குள் நுழைந்து விட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இன்னும் சில நாட்களில் விடுதலைப் புலிகள் முற்றாக ஒழிக்கப்படுவார்கள் எனவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
புதுக்குடியிருப்புக்குள் நுழைய விடாமல் ராணுவத்தை தடுக்கும் வகையில், விடுதலைப் புலிகள் கடுமையாக போரிட்டதாகவும், ஆனால் அதை முறியடித்து ராணுவம் நகருக்குள் நுழைந்து விட்டதாகவும், ராணுவ பிரிகேடியர் சவேந்திர சில்வா கூறினார்.
இனிமேல் எங்களுக்கு எதிர்ப்பு இருக்காது. விரைவில் விடுதலைப் புலிகளை முற்றாக வீழ்த்தி விடுவோம். இனிமேல் வாரக்கணக்கு அல்ல, நாள் கணக்குதான் என்றார்.
முன்னதாக சில நாட்களுக்கு முன்புதான் புதுக்குடியிருப்பைப் பிடித்து விட்டதாக ராணுவம் தெரிவித்திருந்தது. ஆனால் இன்று நகருக்குள் நுழைந்திருப்பதாக ராணுவம் கூறுகிறது. இதில் எது உண்மை என்று தெரியவில்லை.