உயர்நீதிமன்றம்- வளாக கோர்ட்கள் தவிர மற்ற கோர்ட்கள் நாளை முதல் இயங்கும்
சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பிற கோர்ட்களைத் தவிர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கோர்ட்களும் நாளை முதல் மீண்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் நேற்று இரவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழ் கோர்ட்டுகளும், சென்னையில் மூன்று இடங்களில் உள்ள மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளும், சென்னை ஐகோர்ட்டுக்கு வெளியே அமைந்துள்ள அனைத்து தீர்ப்பாயங்களும் 25-ம் தேதிமுதல் செயல்படும். ஐகோர்ட்டு
சம்பவம் காரணமாக கீழ்கோர்ட்டுகள் மூடப்பட்டிருந்த வேலை நாட்கள், இனிவரும் நாட்களில் சரிசெய்யப்படும். இதுதொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.
கோர்ட்டு வளாகங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை முதன்மை மாவட்ட நீதிபதிகள் உறுதி செய்ய வேண்டும். கோர்ட்டு ஆவணங்கள் மற்றும் சொத்துக்களை பாதுகாக்கும் வகையில் கோர்ட்டுக்கு வளாகத்திற்கு வெளியே சற்று தூரத்தில் போலீசார் நிறுத்தப்பட வேண்டும்.
ஐகோர்ட்டு வளாகத்தில் கடந்த 19-ந் தேதி நடந்த சம்பவத்திற்கு பிறகு கீழ் கோர்ட்டுகளில் 20-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை கோர்ட்டு வளாகத்திற்கு உள்ளே ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடந்திருந்தால் அதுகுறித்து முதன்மை மாவட்ட நீதிபதிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற நடைமுறை இனிவரும் காலங்களிலும் பின்பற்றப்பட வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம், அதன் வளாகத்தில் உள்ள பிற கோர்ட்கள், மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஆகியவற்றின் திறப்பு குறித்து நீதிபதிகள் இன்று முடிவு செய்வார்கள்.
போலீஸ் சார்பில் வாதாட தடை:
இதற்கிடையே, மதுரையில் போலீஸ் சார்பில் நீதி மன்றத்தில் யாரும் ஆஜராவதில்லை என்று உயர்நீதிமன்றக் கிளை வக்கீல்கள் முடிவு செய்துள்ளனர்.
சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை அனைத்து வழக்கறிஞர்கள் சங்க கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞர்கள் மீது போலீசார் கொடூர தாக்குதல் நடத்தியதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த சம்பவத்திற்கு காரணமான டிஜிபி ஜெயின், சென்னை போலீஸ் கமிஷினர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
மதுரையில் வக்கீல்களை துப்பாக்கியைக் காட்டி விரட்டிய டிஐஜி மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயர் நீதி மன்ற கிளையில் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்குகளில், அந்த அதிகாரிகள் சார்பில் வக்கீல்கள் யாரும் ஆஜராக கூடாது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பார் அசோசியேஷன் செயலாளர் மகேந்திரன், பெண் வக்கீல் சங்க தலைவர் நிஷா பானு, மதுரை வக்கீல் சங்க செயலாளர் நல்லதம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.