நீதிமன்ற சேதம்-ஆராய நீதிபதி தலைமையில் கமிட்டி
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஆராய ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஞானப்பிரகாசம் தலைமையில் தமிழக அரசு கமிட்டியை அமைத்துள்ளது.
கடந்த 19ம் தேதி நடந்த இந்த மோதலில் ஏராளமான வழக்கறிஞர்களும் போலீசாரும் காயமடைந்தனர். நீதிமன்ற வளாகத்தில் இருந்த போலீஸ் நிலையம் எரிக்கப்பட்டது. வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களும் தீயில் எரிந்து போயின.
மேலும் போலீசார் அடித்து நொறுக்கியதி்ல் ஏராளமான கார்கள், பைக்குகள் உடைந்து சேதமடைந்தன.
20ம் தேதி நீதிமன்றத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த தீயணைப்பு துறைக்கு சொந்தமான ஜீப் தீ வைத்து எரிக்கப்பட்டது.
இந் நிலையில், இந்த சேதங்கள் குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி கே.ஞானப்பிரகாசம் தலைமையில் தமிழக அரசு ஒரு கமிட்டியை நியமித்துள்ளது.
இந்தக் கமிட்டியில், ஓய்வுபெற்ற ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பூர்ணலிங்கம், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்.அதிகாரி பி.ராஜேந்திரன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் (கட்டிடங்கள்) ஆகியோரும் இடம் பெறுவர்.
இரண்டு நாள் நடந்த மோதல் சம்பவத்தில் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், போலீசார், பொதுமக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள், கட்டிடங்கள் மற்றும் வாகனங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து இந்த கமிட்டி மதிப்பீடு செய்யும்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகை, இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளையும் இந்தக் கமிட்டி அரசிடம் வழங்கும்.
கமிட்டி கூடிய ஒரு மாதத்திற்குள் தன் அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.