நீதிமன்ற கலவரம்: நீதி விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
இதுதொடர்பான வழக்கை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச், தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. மேலும், உயர்நீதிமன்றத்திற்குள் போலீஸார் நுழைய உத்தரவிட்டது யார் என்பது உள்பட பல்வேறு கேள்விகளை அது கேட்டிருந்தது.
இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வக்கீல்கள், வன்முறையில் இறங்கியதால்தான் போலீஸார் தடியடி நடத்த நேரிட்டதாக தமிழக அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இதையடுத்து ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான நீதி விசாரணைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த விசாரணைக் கமிஷன் தனது அறிக்கையை 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.
இதுதவிர இணை ஆணையர்கள் சந்தீப் சிங் ரத்தோர், ராமசுப்ரமணி, துணை ஆணையர்கள் சின்ஹா, பன்னீர்செல்வம், சாரங்கன் ஆகியோரை உடனடியாக சென்னையை விட்டு வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
வக்கீல்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டு உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் எனவும் நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.