அதிமுக-காங. கூட்டணி வந்தால்..தா.பாண்டியன்
திருவாரூர்: அதிமுக கூட்டணிக்குள் காங்கிரஸ் வந்தால் எங்களது நிலையை குறித்து பரிசீலிப்போம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
அதிமுக கூட்டணியில் இணையுமாறு காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், யார் அழைப்பு விடுத்தாலும் திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் வெளியேறாது.
மக்களவைத் தேர்தலில் அதிமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி உறுதியாகியுள்ளது. இக்கட்சிகள் தற்போது தேர்தல் உடன்பாடு குறித்துப் பேசி வருகின்றன.
இதற்கு இறுதி வடிவம் அளிக்க மார்ச் 2, 3ம் தேதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதன் பின்னர் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் குறித்து அறிவிக்கப்படும். நாங்கள் ஏற்கெனவே 6 தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளோம். தொகுதி உடன்பாடு குறித்து அனைத்துக் கட்சிகளும் கலந்து பேசிய பிறகே நாங்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து தீர்மானிக்கப்படும்.
அதிமுக கூட்டணிக்கு வருமாறு பாமகவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். காங்கிரஸ் அதிமுக கூட்டணிக்கு வந்தால் எங்களது நிலை குறித்து பரிசீலிப்போம்.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென்பது தான் எங்களது முதல் கோரிக்கை. அதற்கென இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் மூலம் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
விடுதலைப் புலிகள் மீண்டும் போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தும், இலங்கை அரசு அதை நிராகரித்துள்ளது. போர் நிறுத்தம் செய்ய இந்தியா வலியுறுத்தாவிட்டாலும் அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, ஐ.நா சபை ஆகியவை வலியுறுத்தியது ஆறுதல் அளிக்கிறது.
வழக்கறிஞர்கள் மீதான காவல் துறையின் தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இது ஏதோ ஒரு கூட்டத்தைக் கலைப்பதற்காக நடத்தப்பட்டதல்ல, திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்.
காவல் துறையின் இந்த அத்துமீறலைக் கண்டித்து, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் வரும் 27ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.
இலங்கை மீது பொருளாதாரத் தடை-வீரமணி:
இதற்கிடையே திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட்டு்ள்ள அறிக்கையில்,
போரை நிறுத்தக் கோரி அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன் விடுத்த கோரிக்கைகளை இலங்கை அரசு நிராகரித்து விட்டது.
போர் நிறுத்தம் செய்யத் தயார் என விடுதலைப் புலிகள் அறிவித்த பிறகும், அதை ஏற்க இலங்கை அரசு மறுத்து விட்டது. விடுதலைப் புலிகள் முன்வந்த பிறகும் போரை நிறுத்த முடியாது என கூறும் இலங்கை அரசு மீது சர்வதேச நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.