கச்சத் தீவை மீட்க வேண்டும்-எதிர்க் கட்சிகள்
சென்னை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதற்கு முற்றுப்புள்ளி வைக்க கச்சத் தீவை இந்தியா மீட்க வேண்டும் என்று பல்வேறு கட்சி எம்எல்ஏக்களுக்கும் இன்று சட்டசபையில் கோரிக்கை வைத்தனர்.
இன்று கேள்வி நேரம் முடிந்ததும் இந்தப் பிரச்சனை கிளப்பப்பட்டது. அதன் மீது நடந்த விவாதம்:
ஜெயக்குமார் (அதிமுக): தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நூற்றுக்கும் மேற்பட்ட முறை நடத்தியுள்ள தாக்குதல் சம்பவங்களால் 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் 1974ம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்தபோது கச்சத் தீவு இலங்கையிடம் தாரை வார்க்கப்பட்டதுதான்.
வேல்முருகன் (பாமக): இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் பலமுறை நடந்தபோதிலும் இந்திய கடற்படை இலங்கை கடற்படை மீது திருப்பி தாக்குதல் நடத்தாதது வேதனை அளிக்கிறது.
தமிழக மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப் படவில்லை. சிங்கள ராணுவத்தை மத்திய அரசு எச்சரிக்கவும் இல்லை. இதற்கெல்லாம் தீர்வு கச்சத்தீவை மீட்பதுதான்.
குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்ட்): தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படுவதால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை அதிபர் மீதும் இலங்கை ராணுவத்தின் மீதும் கிரிமினல் வழக்கு தொடர வேண்டும்.
கண்ணப்பன் (மதிமுக): தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது. 3 முறை இது தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்தோம். பிரணாப் முகர்ஜி பேசியிருப்பதால் இனி தாக்குதல்கள் இருக்காது என்றும் மீனவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
நன்மாறன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) : ஒருநாள் போவார்; ஒரு நாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம் என்ற அளவில் தமிழக மீனவர்கள் நிலை உள்ளது.
ஆற்காடு பதில்:
அமைச்சர்ஆற்காடு வீராசாமி: இதுபோன்ற துரதிருஷ்டவசமான சம்பவங்களை தடுக்க மீனவர்களின் படகுகள் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்திய கடற்படையும், கடலோர காவல் படையும் ரோந்து சுற்றி வந்து தமிழக மீனவர்களை பாதுகாத்து வருகின்றன.
இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணத்தையும் வழங்கி வருகிறது. இந்த சம்பவம் குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அகமதுடன் நான் பேசினேன்.
சார்க் மாநாட்டிற்கு கொழும்பு செல்லும் அவர், அந்நாட்டு அரசுடன் பேசி இத்தகைய சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
பாமக வெளிநடப்பு:
ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக): கச்சத் தீவை மீட்க சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அப்போது பாமக சட்டமன்ற கட்சித் தலைவர் ஜி.கே.மணி எழுந்து ஏதோ சொல்ல முயன்றார். ஆனால் அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் பாமக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.