வக்கீல்கள் போராட்டம்-தானே வாதாடிய மாணவர்
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருப்பதால், பிளஸ்டூ மாணவர் ஒருவர் தனது வழக்கில் தானே ஆஜராகி வாதாடினார்.
சென்னை உயர்நீதிமன்ற மோதலைத் தொடர்ந்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் வக்கீல்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் நீதிபதிகளும், கோர்ட் ஊழியர்களும் மட்டுமே பணிக்கு வந்து சென்று கொண்டுள்ளனர். வழக்கு விசாரணகைளில் மனுதாரர்களே வாதாடி வருகின்றனர்.
இந்த நிலையில், அரக்கோணத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவன் கார்த்தி என்பவர் தொடர்ந்திருந்த வழக்கு இன்று நீதிபதி சுகுணா முன்பு விசாரணைக்கு வந்தது. வக்கீல் வராததால் மாணவன் கார்த்தியே ஆஜராகி வாதிட்டார்.
மாணவன் கார்த்தி வாதிடுகையில்,
அரக்கோணம் தனியார் பள்ளியில் பிளஸ்2 சயின்ஸ் குரூப் படிக்கிறேன். மார்ச் 2-ம் தேதி தேர்வு தொடங்க இருக்கிறது. பணமில்லாததால் ஹாஸ்டல் ஃபீஸ் 2 ஆயிரம் ரூபாய் கட்ட முடியவில்லை. இதனால், என் அம்மாவை வரவழைத்து டி.சி.யை கொடுத்துவிட்டார்கள்.
எனது தாயாருக்கு காது கேட்காது. தேர்வு நெருங்கும் நேரத்தில் இப்படி செய்தால் நான் எப்படி தேர்வு எழுதுவது என்று கூறி கதறி அழுதார்.
இதையடுத்து, தேர்வு எழுத மாணவர் கார்த்தியை அனுமதிக்க வேண்டும் என நீதிபதி சுகுணா உத்தரவிட்டார். மேலும், பள்ளி நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
விசாரணை மார்ச் 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications