For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தடையை மீறி வைகோ-நெடுமாறன்-தா.பா ஆர்ப்பாட்டம்

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் உயர்நீதிமன்ற வளாகத்தில் போலீஸார், வக்கீல்கள் மீது நடத்திய தாக்குதலைக் கண்டித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் போலீஸ் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்தப் போராட்டத்திற்கு முதலில் போலீஸார் அனுமதி தரவில்லை. இலங்கைப் பிரச்சினைக்காக போராடினால்தான் அனுமதி தருவோம் என்று கூறி அனுமதி மறுத்திருந்தனர்.

ஆனால் தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என தலைவர்கள் அறிவித்திருந்தனர்.

அதன்படி இன்று காலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க தலைவர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன், நல்லக்கண்ணு, தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, ஏ.கே.மூர்த்தி எம்.பி., வன்னியரசு உள்பட பலர் கறுப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தின்போது வைகோ பேசுகையி்ல்,

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான போராட்டம் வலுப்பெற்றுள்ளதால் அதை திசை திருப்ப வக்கீல்கள் மீது போலீசார் கண் மூடித்தனமாக தாக்கினர். இதில் வக்கீல்கள் மட்டுமின்றி நீதிபதி, பொதுமக்களும் அடிபட்டனர்.

ஐகோர்ட்டில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து வண்டிகளையும் போலீசார் வெறித்தனத்துடன் அடித்து நொறுக்கி சூறையாடினர்.

இந்த சம்பவத்தை கண்டித்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த நெடுமாறன் அனுமதி கேட்டார். ஆனால் போலீசார் அனுமதி கிடையாது என அறிவித்து விட்டனர்.

ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்த கூட காவல் துறை அனுமதி மறுக்கிறது. ஆனாலும் நாங்கள் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.

ஐகோர்ட்டில் வக்கீல்களை போலீசார் தாக்கியது கண்டிக்கத்தக்கது. மிகவும் கண் மூடித்தனமாக கொடூர மாக போலீசார் நடந்து கொண்டனர். இவர்களை ஏவி விட்டது யார்? நான் இன்று ஆர்ப்பாட்டத்துக்கு வரும் போது ஒரு போலீஸ் அதிகாரி என்னை அணுகி போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்றார். ஜனநாயக ரீதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுப்பது எந்த வகையில் நியாயம் என்று கேட்டேன்.

நாங்கள் ஜனநாயகத்தை மதிப்பவர்கள், எந்த வன்முறைக்கும் செல்வதில்லை, எனவே அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்றேன்.

வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்தியது போல் இங்கும் போலீசார் அதே மாதிரி சம்பவத்தை அரங்கேற்ற நினைக்கிறார்கள். உங்களது துப்பாக்கி, லத்திக்கு பயப்படும் ஆள் நாங்கள் கிடையாது. கடந்த 4 மாதமாக ஈழத்தமிழர் பிரச்சினைக்கு வக்கீல்கள் அறவழியில் போராட்டம் நடத்தினார்கள்.

சுப்பிரமணியசாமி மீது முட்டை வீசிய சம்பவத்தை காரணமாக வைத்து வக்கீல்களை கொடூரமாக தாக்கியது திட்டமிட்ட சதி. தற்போது 5 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது போதாது சஸ்பெண்டு செய்யப்பட வேண்டும், இவர்கள் மட்டுமின்றி டி.ஜி.பி., கமிஷனர், உள்துறை செயலாளர் ஆகியோரும் சஸ்பெண்டு செய்யப்பட வேண்டும் என்றார் வைகோ.

பழ.நெடுமாறன் பேசுகையில், இலங்கை தமிழருக்காக ஜெனீவாவில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டதும் உடனே அனுமதி தந்தார்கள். ஆனால் தமிழ்நாட்டில் அனுமதி மறுக்கப்படுகிறது. இது அடக்கு முறைக்கு சமம். எங்களை கைது செய்தாலும் கவலைப்பட மாட்டோம் என்றார்.

தா.பாண்டியன் பேசுகையில், வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்திய போலீஸாரின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. காட்டு மிராண்டித்தனமானது. யாராவது ஒருவர் அடித்து விட்டால் போலீஸ் நிலையத்தில் புகார் செய்வோம். பின்னர் அந்த வழக்கு நீதிமன்றம் செல்லும். ஆனால் நீதிமன்றத்தின் உள்ளே சென்று போலீசார் தாக்குகிறார்கள் என்றால் இது என்ன ஜனநாயகமா என்றார்.

போராட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததால் தலைவர்களை போலீஸார் கைது செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது உண்மை. 5 நிமிடத்தில் பேசி விட்டு சென்று விடுவோம் என்று தலைவர்கள் கூறினார்கள். அதன்படி பேச்சை முடித்துக் கொண்டதால் யாரையும் கைது செய்யவில்லை என்று விளக்கமளிக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X