லோக்சபா தேர்தலுக்கு ரூ. 10,000 கோடி செலவாகும் - யு.எஸ். தேர்தலை விட அதிகம்!
இந்த பத்தாயிரம் ரூபாயில், வாக்காளர்களுக்கு கட்சிகள் கொடுக்கும் லஞ்சப் பணம் மட்டும் ரூ. 2500 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
மீடியா ஆய்வுக்கான மையம் இந்த கணிப்பை வெளியிட்டுள்ளது.
2004ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலுக்கு ரூ. 4500 கோடி செலவானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய தேர்தலுக்கு அதை விட இரண்டு மடங்கு செலவாகப் போகிறது.
இதன் மூலம் நாட்டிலேயே மிகவும் அதிக பொருட் செலவில் நடந்த தேர்தல் என்ற பெருமையும் இந்த லோக்சபா தேர்தலுக்குக் கிடைக்கவுள்ளது.
இந்த பத்தாயிரம் ரூபாய் செலவில், ஆந்திரா, ஒரிசா மாநில சட்டசபைத் தேர்தல்களுக்கான செலவுக் கணக்கு சேர்க்கப்படவில்லை.
இந்த பத்தாயிரம் ரூபாயில், அரசின் பங்கு 20 சதவீதமாக இருக்கும். இதில் தேர்தல் ஆணையத்தின் செலவு ரூ. 1300 கோடியாகும். பல்வேறு மத்திய, மாநில அரசுத் துறைகள் செலவிடப்போகும் தொகை ரூ. 700 கோடியாக இருக்கும். வாக்காளர் அடையாள அட்டை, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குச் சாவடிகள் அமைப்பு ஆகியவற்றுக்கான செலவு இது.
பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கட்சி நிதியிலிருந்து ரூ. 1650 கோடியை செலவிடும் (அதிகாரப்பூர்வமாக) எனத் தெரிகிறது. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மட்டும் ரூ. 1000 கோடி வரை செலவிடும் என கணிக்கப்பட்டுள்ளது.
தேசியக் கட்சிகளைச் சேர்ந்த ஒவ்வொரு வேட்பாளரும், செலவிடும் மொத்தத் தொகை ரூ. 4350 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், பிராந்திய கட்சிளின் வேட்பாளர்கள் மொத்தமாக ரூ. 1000 கோடி வரை இறக்கி விடுவார்கள் எனத் தெரிகிறது.
கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான செலவை விட (1.8 பில்லியன்) லோக்சபா தேர்தலுக்கான செலவு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் நாம் ஆறுதல் பட்டுக் கொள்ள ஒரு ஒரே விஷயம் என்னவென்றால் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைமுறைகள் கிட்டத்தட்ட ஒரு வருட காலத்திற்கு நடைபெற்றது. ஆனால் நமது நாட்டில் மொத்தமே 3 மாதங்களில் அந்தப் பணிகள் முடிவடைந்து விடும்.