இன்று ஸ்டாலின் பிறந்தநாள் - தொண்டர்கள் வைத்த பேனர்களை அகற்ற உத்தரவு
சென்னை: உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று 57வது பிறந்த நாளாகும். இருப்பினும், இலங்கை தமிழர்கள் உயிருக்கு போராடி வரும் நிலையில் இன்று தனது 57வது பிறந்தநாளை கொண்டாடுவதில்லை என்று அவர் ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.
தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இன்று தனது 57வது பிறந்தநாள். இதையொட்டி சமீபத்தில் அவர் விடுத்த அறிக்கையில், இலங்கை தமிழர்கள் உயிருக்கு போராடி வரும் நிலையில் தனது பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் என ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
இதனால் ஸ்டாலினின் பிறந்த நாள் விழா எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை. ஆனால் சில தொண்டர்கள் நேற்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சென்னை முழுவதும் டிஜிட்டல் பேனர்கள் வைத்திருந்தனர்.
அரும்பாக்கம், ராஜரத்தினம் மைதானம், நந்தனம் உள்ளி்ட்ட பகுதிகளில் பேனர்கள் அதிகம் வைக்கப்பட்டிருந்தது.
இதை கேள்விப்பட்ட ஸ்டாலின் நேற்று சென்னை முழுவதும் சென்று ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த பேனர்களை அப்புறப்படுத்த சொன்னார்.
தொண்டர்கள் அதை அகற்றும் வரையில் அங்கேயே நின்று பின்னர் தான் கிளம்பினார். தன்னை புகழ்ந்து யாரும் பேனர்கள் வைக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு அன்பு கட்டளையிட்டுள்ளார்.