ரேணுகா மீது நிர்மலா வெங்கடேஷ் பாய்ச்சல்
மங்களூர் பப்பில் பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து நிர்மலா வெங்கடேஷ் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு திடீரென நிர்மலா தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து பெங்களூரில் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா வெங்கடேஷ் மத்திய அமைச்சர் ரேணுகா செளத்ரி, தேசிய மகளிர் ஆணையத் தலைவர் கிரிஜா வியாஸ் ஆகியோரை கடுமையாக சாடினார். தனது நீக்கத்தின் பின்னணியில் அரசியல் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
பேட்டியின்போது நிர்மலா கூறுகையில், எனது நீக்கத்தில் அரசியல் சதித் திட்டம் அடங்கியுள்ளது. என்னை நீக்கியவர்களுக்கு அதற்கான தகுதி இல்லை.
எனது பெயரைக் கெடுப்பதற்காக திட்டமிட்டு செய்யப்பட்ட அரசியல் சதி இது. இதை நான் கண்டிக்கிறேன். தேசிய மகளிர் ஆணையத்தில், நான் மட்டுமே சட்டப்படியான தகுதி பெற்ற உறுப்பினர். எனது நேர்மை அனைவரும் அறிந்ததே.
மங்களூர் பப் தாக்குதல் விவகாரத்தை பெரிதுபடுத்தி கர்நாடகத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முனைந்துள்ளார் ரேணுகா செளத்ரி. அதை விட முக்கியமான பல பிரச்சினைகள் உள்ளபோது பப் விவகாரத்தை மட்டும் அவர் பெரிதுபடுத்த முயலுகிறார்.
ஆந்திரா, உ.பி போன்ற மாநிலங்களில் மிகப் பெரிய சம்பவங்கள் நிகழ்ந்தபோதெல்லாம் ஏன் வாயை மூடிக் கொண்டிருந்தார் ரேணுகா செளத்ரி?. என்னைப் பொறுத்தவரை கட்சி, அரசு என்பதை விட எனது மாநிலம் என்பதுதான் எனக்கு முக்கியம்.
தேசிய மகளிர் ஆணையத் தலைவர் கிரிஜா வியாஸ், பப் தாக்குதல் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்வதில் வேண்டும் என்றே தாமதம் காட்டினார். நான் கொடுத்த அறிக்கையை தாக்கல் செய்வதில் அவர் வேண்டுமேன்றே இழுத்தடித்தார். எனவே எனது நீக்கத்திற்கு அவரும் ஒரு காரணம் என கருதுகிறேன் என்றார் நிர்மலா.
பத்திரிக்கையாளருடன் கடும் வாதம்
பேட்டியின்போது ஒரு செய்தியாளருக்கும், நிர்மலாவுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் எழுந்தது. இது பெரிய அளவிலான சண்டையாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இருவரும் நீண்ட நேரம் கடுமையாக வார்த்தைச் சண்டையில் இறங்கினர். சக பத்திரிக்கையாளர்கள் இருவரையும் விலக்கி விட்டனர்.