தடையை மீறி முன்னாள் போலீஸார் உண்ணாவிரதம்!
கோவை: சென்னை உயர்நீதிமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்ட வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், போலீஸாரை பலிகடாவாக்கக் கூடாது என்று வலியுறுத்தி கோவையில் வருகிற 6ம் தேதி திட்டமிட்டபடி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என முன்னாள் போலீஸார் மற்றும் போலீஸ் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
உயர்நீதிமன்ற வளாகத்தில் வன்முறையில் ஈடுபட்ட வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் ஓய்வு பெற்ற போலீசார் தங்களது குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தற்போது மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியுள்ளது. கோவையில் முன்னாள் காவல்துறை அதிகாரிகள் சங்கத்தினர் வருகிற 6-ந்தேதி உண்ணாவிரதத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.
கோவை காந்திபுரம் பகுதியில், உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரி முன்னாள் போலீஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் காவல்துறை ஆணையர் மாஹாலியிடம் மனு தரப்பட்டது.
இதுகுறித்து கோவை முன்னாள் காவல்துறை அதிகாரிகள் சங்க செயலாளரும், ஓய்வு பெற்ற எஸ்.பியுமான வேலு கூறுகையில்,
சென்னை ஐகோர்ட்டில் நடந்த போலீஸ் மீதான தாக்குதல் கண்டனத்துக்குரியது. வழக்கு விசாரணைக்கு செல்லும் போலீஸ் அதிகாரிகள் மீதும் இதுபோல பலமுறை தாக்குதல்கள் நடந்துள்ளன. சட்டத்தை மீறி போலீஸ் நிலையத்துக்கு தீ வைத்தவர்கள், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துமீறலில் ஈடுபட்ட போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தியும், ஐகோர்ட்டு மோதல் சம்பவத்தை கண்டித்தும் கோவை காந்திபுரம் மத்திய பஸ்நிலையம் எதிரில் வருகிற 6-ந்தேதி உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம். போலீசிடம் அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி மறுக்கப்பட்டால் தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என்றார்.
இந்த போராட்டத்தில் போலீஸ் குடும்பத்தினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கோரி சங்கம் சார்பில் போலீஸாரின் இல்லங்களுக்கு நேரில் சென்று துண்டுப் பிரசுரங்களையும் சங்க நிர்வாகிகள் வழங்கி வருகின்றனர்.