காங்-தேசியவாத காங் கூட்டணி-தொகுதி மாறிய பவார்
மும்பை: மகராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. சரத்பவார் வழக்கமாக போட்டியிடும் பாரமதி தொகுதிக்கு பதிலாக மாதா தொகுதியில் இருந்து போட்டியிட இருக்கிறார்.
கடந்த 2004ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்து 21 தொகுதிகளில் தேசியவாத காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. இம்முறை மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் பாதியான 24 இடங்களை காங்கிரசிடம் வாங்கிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது.
இதற்கு காங்கிரஸ் சம்மதிக்க மறுத்ததை அடுத்து, சிவசேனாவுடன் இணைந்து தேர்தலை சந்திப்போம் என மிரட்டினார் பவார்.
இந் நிலையில் நேற்று இவ்விரு கட்சிகளுக்கும் இடையே நடந்த நான்காவது கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
இந்த உடன்பாட்டின் மூலம் இரு கட்சிகளும் 41 தொகுதிகளை தங்களுக்குள் பிரித்து கொள்ளலாம் என்றும், மற்ற 7 தொகுதிகளை சமாஜ்வாடி, இந்திய குடியரசு கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிவிடலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தங்களுக்கு பிரிக்கப்படும் 41 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலா 19 தொகுதிகளில் போட்டியிடும் என்றும், மீதமுள்ள 3 தொகுதிகளை தங்களுக்குள் யாருக்கு ஒதுக்குவது என்பது பின்பு முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளன.
அதேசமயத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சொந்த தொகுதியான பாரமதியில் இருந்து இம்முறை போட்டியிடமாட்டார் என தெரிகிறது. அவர் மாதா தொகுதியில் இருந்து போட்டியிட இருக்கிறார்.