நவீன் சாவ்லாவை நீக்கக் கோரி வழக்கு
டெல்லி: தேர்தல் ஆணையர் பதவியில் நவீன் சாவ்லா தொடரக் கூடாது. தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி குடியரசுத் தலைவருக்கு செய்த பரிந்துரையை விரிவாக விசாரிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசாமி கடந்த மாதம் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்தார்.
ஆனால் கோபாலசாமியை கடுமையாக கண்டித்த காங்கிரஸ், கோபாலசாமியின் பரிந்துரையை குடியரசுத் தலைவர் ஏற்க மாட்டார் என தெரிவித்தது.
அதற்கேற்ப ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய பரிந்துரையில், கோபாலசாமியின் பரிந்துரையை நிராகரிக்குமாறு தெரிவித்திருந்தது. அதன்படி குடியரசுத் தலைவரும், கோபாலசாமியின் பரிந்துரையை தள்ளுபடி செய்து விட்டார்.
மேலும் அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையராக நவீன் சாவ்லா பதவியேற்கவும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். ஏப்ரல் 20ம் தேதி அவர் பதவியேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி என்ற கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், தலைமை தேர்தல் ஆணையருக்கு அதிகாரம் உண்டு தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யும்படி பரிந்துரை செய்ய, அரசியல் அமைப்பு சட்டம் 324, பிரிவு 5ன் கீழ் தலைமை தேர்தல் ஆணையருக்கு அதிகாரம் உண்டு.
ஆகவே கோபாலசாமியின் பரிந்துரையை ஏற்று நவீன் சாவ்லாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை, பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, 2 ஐகோர்ட்டுகளின் தலைமை நீதிபதிகள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கமிட்டியின் பரிந்துரையை ஏற்று நியமனம் செய்ய வேண்டும் என்று வீரப்பமொய்லி தலைமையிலான நிர்வாக சீர்திருத்த குழு தெரிவித்து உள்ளது. இதை உடனடியாக அமல்படுத்தும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மட்டும் நியமிக்காமல், ஓய்வு பெற்ற நீதிபதிகள், சிறந்த கல்வியாளர்கள், திறமையான வக்கீல்கள் ஆகியோரையும் நியமிக்க கோர்ட்டு உத்தரவிட வேண்டும்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
மனுவைப் பரிசீலித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச், மனு மீதான விசாரணை வருகிற 20ம் தேதி நடைபெறும் என்று அறிவித்தது.












Click it and Unblock the Notifications