திமுக வக்கீல்கள் சங்கத்திலிருந்து சஸ்பெண்ட்: பால் கனகராஜ்
சென்னை: சங்க கட்டுப்பாட்டை மீறி பணிக்குச் சென்ற அரசு வக்கீல்கள் (திமுக) சங்கத்திலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சங்கம் எந்தவிதமான ஒத்துழைப்பையும் அளிக்காது என்று சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வக்கீல்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். பிற்பகலில் மனிதச் சங்கிலி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், சங்கக் கட்டுப்பாட்டை மீறி பணிக்குச் சென்று ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்த ஆளுங்கட்சி வக்கீல்கள் (அரசு வக்கீல்கள்) சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக பால் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
மொத்தம் 15 பேர் இவ்வாறு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பால் கனகராஜ் கூறுகையில், அரசு வக்கீல்கள் 15 பேர் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. அதனால் உண்ணாவிரதப் பந்தலை சங்கத்தின் பொதுக்குழுவாக கருதி பணிக்கு சென்ற அரசு வக்கீல்களை நீக்கம் செய்வது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அதற்கு ஆதரவு தெரிவிப்போர் கைகளை உயர்த்த வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கு ஏராளமான வக்கீல்கள் ஆதரவு தெரிவித்து கைகளை உயர்த்தினர்.
இதையடுத்து சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அந்த 15 அரசு வக்கீல்களும் தற்காலிக நீக்கம் செய்யப்படுவதாக சங்கத் தலைவர் பால்கனகராஜ் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து அடுத்தக்கட்ட போராட்டம் அமையும் என்றும், உச்சநீதிமன்றத்தில் நியாயம் கிடைக்காவிட்டால் தொடர்ந்து போராடுவோம் என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications