17ம் தேதி திமுகவுடன் இணைகிறது போட்டி மதிமுக
சென்னை: மார்ச் 17ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் திமுகவுடன் இணையவுள்ளதாக போட்டி மதிமுக நிர்வாகிகளான எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் கூறியுள்ளனர்.
மதிமுகவிலிருந்து போட்டி மதிமுகவைத் தொடங்கியவர்கள் எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும். கட்சியை உடைத்து வைகோவுக்கு நெருக்கடி தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட இவர்கள், எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாமல் தன்னந்தனி தலைவர்களாக வலம் வந்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், தங்களது கட்சியை திமுகவுடன் இணைக்க முடிவு செய்து விட்டனர் இருவரும்.
இதுகுறித்து இரு தலைவர்களும் செய்தியாளர்களிடம் பேசுகையில், வருகிற 17ம் தேதி செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் தி.மு.கழகத்துடன், போட்டி ம.தி.மு.க. கட்சி இணையும் இணைப்பு விழா நடைபெறுகிறது.
விழாவிற்கு தமிழக முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். அமைச்சர் க.அன்பழகன், பொருளாளர் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
செஞ்சி ராமச்சந்திரன் வரவேற்புரை வழங்குகிறார். திருவாரூர் தியாகபாரதி நன்றியுரை வழங்குகின்றார். விழாவில் ம.தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்பட கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்துகொள்கின்றனர் என்றனர்.
கட்சி நடத்த முடியவில்லை
கட்சியை தனியாக நடத்த முடியவில்லை. இதனால் தான் திமுகவில் இணைகிறோம். அதில் வெட்கப்பட எதுவும் இல்லை. நாங்கள் எந்த எதிர்பார்ப்பும் இன்றி திமுகவில் இணைகிறோம்.
திமுகவுடன் இணைந்து செயல்படும் படி, முதல்வரும், அந்தக் கட்சியின் தலைவருமான கருணாநிதி கேட்டுக் கொண்டார். அதன்படி, நாங்கள் திமுகவுடன் இணைகிறோம். யாருக்கு எந்தப் பொறுப்பு கொடுக்க வேண்டும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.