யாரையும் மிரட்டலை-கருணாநிதிக்கு குப்தா பதில்
மதுரை: வன்னியர் பொதுச் சொத்துக்கள் நல வாரியம் குறித்த செய்தியை போடக் கூடாது என்று எந்த பத்திரிக்கையையும் நான் மிரட்டவில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்கு நரேஷ்குப்தா பதிலளித்துள்ளார்.
மதுரை வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், வன்னியர் சொத்து நல வாரியம் குறித்த செய்தியை போட வேண்டாம் என எந்த பத்திரிக்கையாளரையும் நான் மிரட்டவில்லை, கேட்டுக் கொள்ளவும் இல்லை.
எனக்கே மார்ச் 3ம் தேதி மீடியாக்களில் வந்த செய்தியைப் பார்த்துதான் இந்த வாரிய நியமனம் குறித்தே தெரியும்.
நான் யாரையும் சென்று சந்தித்து எனக்கு பழக்கமில்லை. இதற்கு முன்பு முதல்வராக இருந்தவரைக் கூட நான் சந்தித்ததில்லை. தேர்தல் ஆணையம் தன்னிச்சையான அமைப்பு என்பதால் எந்தத் தலைவர்களையும் சந்திப்பதில்லை என்ற கொள்கை நடைமுறையில் உள்ளது.
முதல்வரை சந்திக்காததற்கு இதைத்தவிர வேறு காரணம் எதுவும் இல்லை.
வன்னியர் பொது சொத்து நலவாரியம் குறித்த செய்திகளை வெளியிடக்கூடாது என்று யாரையும் நான் தடுக்கவில்லை. அரசு தரும் செய்திகளை வெளியிடக் கூடாது என்று நான் எப்படி சொல்ல முடியும். அப்படியே நான் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்வார்களா?.
முதல்வர் கருணாநிதியின் குற்றச்சாட்டுக்கள் புதியவை அல்ல. மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலின் போதே என் மீது இத்தகைய குற்றச் சாட்டுகளை கூறியிருக்கிறார் என்றார் குப்தா.
நேற்று வெளியிட்ட அறிக்கையில் குப்தாவை முதல்வர் கருணாநிதி ஒரு பிடி பிடித்தது நினைவுகூறத்தக்கது.