For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் காங்கிரஸை கூட்டணிக்கு அழைக்கவே இல்லை - ஜெ.

By Sridhar L
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: அதிமுகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் உள்ள நீண்ட கால நட்பை கருத்தில் கொண்டு, காங்கிரஸ் கட்சி புதை மண்ணில் மாட்டிக் கொண்டு விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் திமுக கூட்டணியில் இருந்து வெளி வர வேண்டும் என்று ஆலோசனை கூறினேனே தவிர, எங்கள் கூட்டணியில் வந்து சேர வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கவில்லை என்பதை கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

வம்புக்கு இழுக்கும் கருணாநிதி

இதுதொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை:

திமுக ஆட்சியை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற சுயநல நோக்கத்தோடும், திமுக மீது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் இருக்கும் அதிருப்தியைப் போக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும், வழக்கம் போல் என்னை வம்புக்கு இழுத்து 'உடன்பிறப்புக்கு கடிதம்" என்ற போர்வையில் ஒரு நீண்ட அறிக்கையை கருணாநிதி வெளியிட்டிருக்கிறார்.

கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், அதிமுக கூட்டணிக்கு வருமாறு நான் காங்கிரசுக்கு அழைப்பு விடுத்ததாக குறிப்பிட்டிருக்கிறார். அதிமுக, காங்கிரஸ் கட்சிக்கும் உள்ள நீண்ட கால நட்பை கருத்தில் கொண்டு, காங்கிரஸ் கட்சி புதை மண்ணில் மாட்டிக் கொண்டு விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் திமுக கூட்டணியில் இருந்து வெளி வர வேண்டும் என்று ஆலோசனை கூறினேனே தவிர, எங்கள் கூட்டணியில் வந்து சேர வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்க வில்லை என்பதை முதலில் கருணாநிதிக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

தேசிய பாதுகாப்பு குறித்து ராணுவ ரகசியங்களை விடுதலைப் புலிகளுக்கு தெரிவித்தமைக்காக 1991ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியில் இருந்து சந்திரசேகர் தலைமையிலான மத்திய அரசால், கருணாநிதி தலைமையிலான திமுக அரசு கலைக்கப்பட்டதையும்; ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 'சந்தேகத்தின் நிழல் கருணாநிதியின் மீது படிந்திருக்கிறது" என்று ஜெயின் விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டதன் காரணமாக 1997ஆம் ஆண்டு குஜ்ரால் தலைமையில் திமுக அங்கம் வகித்த மத்திய அரசுக்கு காங்கிரஸ் கொடுத்து வந்த ஆதரவை திரும்பப் பெற்று அதன் விளைவாக மத்திய அரசு கவிழ்ந்ததையும் முற்றிலுமாக மறைத்து 'இலங்கையிலே உள்ள தமிழர்கள் காப்பாற்றப்பட்டே ஆக வேண்டுமென்ற குறிக்கோளில் ஒரு குன்றிமணி அளவுக்குக்கூட என்றைக்கும் காங்கிரசுக்கும், திமுகவிற்கும் இடையே வேறுபாடோ, மாறுபடோ இருந்ததில்லை" என்று கருணாநிதி கூறியிருப்பது முழு பூசணிக்காயைசோற்றில் மறைப்பது போல் உள்ளது.

வஞ்சக செயலில் வல்லவர்

அதிமுக கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ் கட்சி மேலிடம் பரிசீலிக்க வேண்டும் என காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களும், மாநில நிர்வாகிகளும் குலாம் நபி ஆசாத்திடம் வற்புறுத்தினர் என்ற உண்மைச் செய்தியை அனைத்து நாளிதழ்களும் வெளியிட்டுள்ளன. ஆனால் கருணாநிதியோ தன்னுடைய அறிக்கையில் இது போன்ற செய்தியை அதிமுக கடும் முயற்சி செய்து வெளியிட்டதாகக் கூறியிருக்கிறார். இது போன்ற வஞ்சக செயலில் ஈடுபடும் கலையில் வல்லவர் கருணாநிதிதான் என்பதை நாடு நன்கு அறியும்.

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி மதுரைக்கு வந்தபோது அவருக்கு கருப்பு கொடி காட்டி, அவர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்த காரணமாக இருந்த கருணாநிதி; பெருந்தலைவர் காமராஜரை 'அண்டங்காக்கை" என்றும், பேரிச்சம்பழம் விற்கிறவர் என்றும், சுவிஸ் வங்கியில் பணம் வைத்திருப்பவர் என்றும் கேலி செய்த கருணாநிதி; விதவை ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் கேட்டு இந்திரா காந்தி விண்ணப்பித்தால்அது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கிண்டல் செய்த கருணாநிதி; விமானம் ஓட்டத் தெரியாதவர் நாட்டை ஆள்வது எப்படி என்றும், பிரதமராக இருப்பதற்கு லாயக்கற்றவர் என்றும், அனுபவ முதிர்ச்சியற்றவர் என்றும், ஊழல்களை மறைப்பதற்காக வி.பி.சிங்கை பந்தாடியவர் என்றும், சாவுக்கு ஓட்டு வாங்கி ஆட்சியை பிடித்தவர் என்றும் ராஜீவ் காந்தியை விமர்சித்த கருணாநிதி; இவை அனைத்தையும் மறைத்துவிட்டு, 'தீயினால் சுட்ட புண் உள்ளாறும்; ஆறாதே நாவினால் சுட்ட வடு" என்ற திருக்குறளை காங்கிரசார் மறந்திருக்க நியாயமில்லை என்று தனது அறிக்கையில் 'புனிதர்" கருணாநிதி கூறியிருப்பது எந்தவிதத்தில் நியாயம் என்று காங்கிரஸ் தொண்டர்கள் குமுறுவது கருணாநிதியின் காதுகளுக்கு இன்னும் எட்டவில்லை போலும்!

தொண்டர்கள் கேட்பது காதில் விழவில்லையா!

ராஜீவ் காந்தி சிலையை சேதப்படுத்தியவர்கள் மீதும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனை சேதப்படுத்தியவர்கள் மீதும், அங்குள்ள காங்கிரஸ் தொண்டர்களை தாக்கியவர்கள் மீதும் எந்தவிதமான நடவடிக்கையும் கருணாநிதி எடுக்கவில்லையே என்று காங்கிரஸ் தொண்டர்கள் கேட்பது கருணாநிதியின் செவிகளுக்கு எட்டவில்லை போலும்! தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வரும் தனது கைக்கருவி திருமாவளவனை கைது செய்யாமல் காங்கிரஸ் மேலிடத்தை திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காக சீமான், கொளத்தூர் மணி போன்ற ஒரு சிலரை மட்டும் கைது செய்து கண்துடைப்பு நாடகத்தை நிறைவேற்றியிருப்பது துரதிருஷ்டவசமானது.

கடுமையான மின்வெட்டு, விண்ணைமுட்டும் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், மந்தமான பொருளாதார சூழ்நிலை, விவசாய உற்பத்தியின்மை, தொழில் சரிவு, திமுக அமைச்சர்களின் அராஜகம், சட்டம்-ஒழுங்கு சீரழிவு, கருணாநிதி குடும்பத்தினரின் சர்வாதிகாரப் போக்கு போன்ற பல்வேறு தீர்க்க முடியாத பிரச்சனைகள் காரணமாக தமிழக மக்கள் கருணாநிதியின் மீதும் திமுக அரசின் மீதும் கடுங்கோபத்தில் உள்ளனர்.

எனது ஆட்சிக் காலத்தில் அமைதிப் பூங்காவாக விளங்கிய தமிழகம் தீவிரவாதிகளின் புகலிடமாக இன்று காட்சி அளிக்கிறது. இதை மனதில் வைத்துத்தான், திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளிவர வேண்டும் என்று நான் ஆலோசனை கூறியிருந்தேன். ஆனால் மக்களே ஆச்சரியப்படும் அளவுக்கு திமுக - காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே ஒருமித்த கருத்து இருப்பதாக குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

விலைவாசி உயர்வு, கடுமையான மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீரழிவினால் பாதுகாப்பின்மை ஆகியவற்றை நாட்டு மக்களுக்கு பரிசாக தந்துவிட்டு ஸ்பெக்ட்ரம் ஊழல் உள்ளிட்ட பல இமாலய ஊழல்கள் புரிந்து தங்கள் குடும்பங்களுக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய் அளவில் ஊழல் பணத்தை சேர்த்துக்கொண்டு நாட்டைச் சுரண்டி எடுப்பதில் இரு கட்சிகளுக்கிடையே ஒத்த கருத்து இருப்பதைத்தான் இது காட்டுகிறது. அதனால்தான் திமுகவை விட காங்கிரசிற்கு மனமில்லை, காங்கிரஸை விட திமுகவிற்கு மனமில்லை போலும்!

காங்கிரஸ் உணரும்

சிலரை பல நாட்களுக்கு ஏமாற்றலாம், பலரை சில காலம் ஏமாற்றலாம்; ஆனால் எல்லோரையும் எப்பொழுதும் ஏமாற்ற முடியாது என்பதை தெரிவித்துக் கொண்டு 'நாடொறும் நாடி முறை செய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும்" என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க, ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து, அவற்றிற்குத் தக்கவாறு நடந்து கொள்ளாது நாட்டை சீரழித்த திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் மக்கள் வாக்களிக்கத் தயாராகிவிட்டார்கள் என்பதையும் தேர்தல் முடிவிற்குப் பிறகு இதை காங்கிரஸ் கட்சி நிச்சயம் உணரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X