சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறேன்-திருமா
சென்னை: திமுக அணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் சிதம்பரத்தில் கண்டிப்பாக போட்டியிடுகிறேன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெறக் கூடாது என காங்கிரஸ் கூறி வருகிறது. இருப்பினும் காங்கிரஸை சமாதானப்படுத்தி திருமாவளவனை கூட்டணியில் தக்க வைத்துக் கொள்ள திமுக விரும்புகிறது.
அதேசமயம், சிதம்பரம் உள்பட 3 தொகுதிகளில் போட்டியிட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முடிவு செய்துள்ளது. இருப்பினும் இத்தனை சீட்களை திமுக தருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இந்த நிலையில் திமுக கூட்டணியி்ல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிதம்பரம் தொகுதியில் தான் கண்டிப்பாக போட்டியிடப் போவதாக திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
தி.மு.க. கூட்டணியில் தற்போது வரை விடுதலை சிறுத்தைகள் கட்சி நீடித்து வருகிறது. இதுவரையிலும் கூட்டணி தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்துவதற்கு தி.மு.க. தரப்பில் இருந்து எந்தவித அழைப்பும் வரவில்லை. கூட்டணி தொடர்பாக அவர்கள் அழைத்தால் பேசுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
சிதம்பரம் மற்றும் 2 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். தி.மு.க. கூட்டணியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி சிதம்பரம் தொகுதியில் நான் போட்டியிடுவது உறுதி.
நாளை கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்ளவுள்ளேன். அப்போது முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றார் அவர்.