536 அங்கன்வாடி பணியாளர்களுக்கு பணி நியமன உத்தரவு
விழுப்புரம்: புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள அங்கன் வாடி பணியாளர்கள் 536 பேருக்கு பணிநியமன உத்தரவை உயர்கல்வி அமைச்சர் பொன்முடி வழங்கினார்.
அங்கன்வாடி பணியாளர்களுக்கு நியமன உத்தரவை வழங்கும் நிகழ்ச்சி விழுப்புரத்தில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட எஸ்.பி. அ.அமல்ராஜ், மாவட்ட ஊட்டச்சத்து திட்ட அலுவலர் பிரபாவதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் 2721 அங்கன் வாடி மையங்கள் உள்ளது. இங்கு பொறுப்பாளர், உதவியாளர் பணியிடங்கள் 800 காலியாக இருந்ததையடுத்து பணிகள் பாதிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் காலி பணியிடங்களுக்கு ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட 81 பொறுப்பாளர்களுக்கும், 455 உதவியாளர்களுக்கும் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பணிநியமன ஆணை வழங்கினார்.
அப்போது பொன்முடி பேசுகையில், பணி நியமனம் தகுதி அடிப்படையிலேயே நடைபெற்றுள்ளது. யாரும், யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். புரோக்கர் போன்றவர்களை நாட வேண்டாம். பணியாணை பெற்ற அனைவரும் உடனடியாக பணியில் சேருங்கள் என்றார்.