லாகூர் தாக்குதல்-4 தீவிரவாதிகள் கைது: பாக்
லாகூர்: லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக நான்கு தீவிரவாதிகளை கைது செய்திருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இவர்கள் நான்கு பேரும் கராச்சி, லாகூர் மற்றும் ரஹீம் யார் கான் ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஐ.நாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல்லா ஹூசேன் ஹாரூன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தற்போது விசாரணை நடந்து வருகிறது. பெரிய அளவில் பலரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களில் நான்கு பேருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கருதப்படுகிறது. அவர்களைத்தான் போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர்.
தீவிரவாதிகளை நாங்கள் பிடிக்கத் தொடங்கி விட்டோம். இது நல்ல அறிகுறியாகும்.
லாகூர் தாக்குதல் தொடர்பாக மீடியாக்கள் பல்வேறு செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்தியாவில் எது நடந்தாலும் பாகிஸ்தானை சுட்டிக் காட்டுவதும், பாகிஸ்தானில் எது நடந்தாலும் இந்தியாவை சுட்டிக் காட்டுவதும் வழக்கமாக உள்ளது. இருப்பினும் உண்மை என்ன என்பது தெரியும் வரை அமைதி காப்பது அவசியம் என்றார்.
லாகூர் சம்பவத்தைத் தொடர்ந்து ஆப்கானியர்கள் உள்பட 300க்கும் மேற்பட்டோரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான் நான்கு பேரை கைது செய்திருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.