1,600 சுபிக்ஷா கடைகள் மூடல்!
சென்னை: கடந்த 6 மாதங்களாக நிதி நெருக்கடி, நிர்வாகச் சீர்கேடுகளில் சிக்கித் தவித்த சுபிக்ஷா ஒரு வழியாக இழுத்து மூடப்பட்டது.
இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான 1600 கடைகளும் மூடப்பட்டன. இவற்றில் பணியாற்றிய 15,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் 6 மாத சம்பள பாக்கியுடன் வெளியேறியுள்ளனர்.
தமிழகத்தில் மட்டும் இந்நிறுவனத்திற்கு 137 கிளைகள் உள்ளன. இதில் 2,300 பேர் பணியாற்றி வந்தனர். தலைநகர் சென்னையில் 67 கடைகள் இருந்தன. இவற்றில் 1,300 பேர் வரை வேலை பார்த்தனர்.
தொடக்கத்தில் லாபத்தில் இயங்கிய இந்நிறுவனம் கடந்த சில மாதங்களாக பெரும் சரிவை சந்தித்தது.
நஷ்டத்தில் இருந்து மீள பல்வேறு முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை. அந்த ஆத்திரத்தில் கடைகள் சூறையாடப்பட்டன. சேதத்தைத் தவிர்க்க, 2 மாதங்களுக்கு முன்பு கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் இந்தியா முழுவதும் இந்நிறுவனத்தில் பணியாற்றிய பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழந்தனர்.
சென்னையில் பணியாற்றி வந்த 1,300 ஊழியர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு மேல் சம்பளம் எதுவும் தரப்பட வில்லை. அவர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பள பாக்கி உள்ளதாக ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள சுபிக்ஷா கடையில் பணி யாற்றிய மானேஜர் ஒருவர் கூறும் போது. "சுபிக்ஷா நிறுவனம் நல்ல லாபத்தில் இயங்கி வந்தது. இதில் கிடைத்த பணத்தை நிறுவன நிர்வாகிகள் அதன் மற்ற நிறுவனங்களில் முதலீடு செய்தனர். இதனால்தான் நிறுவனம் நஷ்டத்தில் மூழ்கியது.
நஷ்டத்தில் இருந்து தப்பிக்க வங்கியில் இருந்து ரூ.800 கோடி கடன் பெறப்பட்டது. அதிலும் பலன் கிடைக்காததால் நிறுவனத்தை மூடிவிட்டனர்" என்றார்.
இந்நிறுவனத்துக்கு கடன் வழங்கிய ஐசிஐசிஐ வங்கி, நிர்வாக சீர்கேடுகள், பணத்தைக் கையாண்டதில் நடந்துள்ள தவறுகள் மற்றும் நாணயமற்ற வியாபாரம்தான் சுபிக்ஷாவின் வீழ்ச்சிக்குக் காரணம் என பகிரங்கமாகக் குற்றமசாட்டியது நினைவிருக்கலாம்.