தொகுதி பங்கீடு-திமுகவுடன் பேச காங். ஐவர் குழு
டெல்லி: திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச தங்கபாலு, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் அடங்கிய ஐந்து பேர் கொண்ட குழுவை கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், தமிழகத்தில் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச ஐந்து பேர் கொண்ட குழுவை கட்சித் தலைவர் சோனியா காந்தி நியமித்துள்ளார்.
இக்குழுவில் மாநில தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழக சட்டமன்ற கட்சித் தலைவர் சுதர்சனம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து இக்குழு பேசி இறுதி செய்த பின்னர் தொகுதிகள் குறித்த விவரங்களை காங்கிரஸ் மேலிடம் வெளியிடும்.
தேமுதிக குறித்து பரிசீலனை:
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில்தான் பாமக நீடிக்கிறது. இதில் எங்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லை. தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம் என்றார் ஆசாத்.
கூட்டணியில் பாமக நீடிக்கிறது:
பாமக, அதிமுக கூட்டணியில் சேரப் போவதாக செய்திகள் வெளி வருகிறதே என்று அவரிடம் குறிப்பாக கேட்டதற்கு,
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில்தான் பாட்டாளி மக்கள் கட்சி இன்னும் உள்ளது என்றார்.
கூடுதல் சீட் வேண்டும்-இளங்கோவன்:
இந் நிலையில் மத்திய இணையமைச்சர் இளங்கோவன் கூறுகையில், கடந்த தேர்தலில் காங்கிரஸ் 10 தொகுதியில் போட்டியிட்டு வென்றது. இந்த முறை கூட்டணியில் கம்யூனிஸ்டுகள் இல்லை என்பதால் கூடுதல் சீட் கிடைக்க வாய்ப்புள்ளது. திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு எந்தெந்த கட்சிகள் வரும், போகும் என்பது இன்னும் முழுமையாக தெரியவில்லை.
கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் கூடுதல் இடங்களில் காங்கிரஸ் போட்டியிட விரும்புகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியை கூட்டணியில் சேர்த்து கொள்வது பற்றி முதல்வர் கருணாநிதியுடன் நடத்தும் பேச்சுவார்த்தையில் தான் முடிவு செய்யப்படும்.












Click it and Unblock the Notifications