தொகுதிப் பங்கீடு: அதிமுக-சிபிஎம் ஆலோசனை
சென்னை: தொகுதிப் பங்கீடு குறித்து அதிமுக குழுவுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழு இன்று பேச்சு நடத்தியது.
அதிமுக கூட்டணியல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெற்றுள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக இரு கட்சிகளும் குழுக்களை நியமித்துள்ளன. இந்தக் குழுக்களின் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று நடந்தது.
அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில், அதிமுக சார்பி்ல் ஓ.பன்னீர் செல்வம், மதுசூதனன், ஜெயக்குமார், தம்பித்துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
மார்க்சிஸ்ட் சார்பில் அதன் மாநில செயலாளர் வரதராஜன், டி.கே.ரங்கராஜன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் வரதராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளோம். இந்த பேச்சுவார்த்தை தொடரும்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இலங்கையில் போர் நிறுத்தம் கோரி மேற்கொள்ளவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறோம் என்றார்.