ஐபிஎல் தொடரை ஒத்திவைப்பதால் ஒரு நஷ்டமும் இல்லை: கருணாநிதி
தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 16 முதல் மே 13 வரை நடைபெறும் என அறிவித்தது. இதே சமயத்தில் ஐபிஎல் சார்பில் டுவென்டி-20 கிரிக்கெட் தொடர் சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் நடப்பதாக இருக்கிறது.
இதையடுத்து உள்துறை அமைச்சர் சிதம்பரம் போட்டிகளை ஒத்திவைக்குமாறு கேட்டுகொண்டார். ஆனால், தொடரை மொத்தமாக தள்ளிவைக்க முடியாது. தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன் 48 மணி நேரத்துக்கு போட்டிகள் இல்லாமல் பார்த்து கொள்கிறோம் என ஐபிஎல் தலைவர் லலித் மோடி அறிவித்தார்.
இந்நிலையில் கிரிக்கெட் பிரியரான முதல்வர் கருணாநிதி இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், தேர்தல் நேரத்தில் ஐபிஎல் டுவென்டி-20 தொடரை நடத்தும் விஷப்பரீட்சையில் ஈடுபடக் கூடாது. கிரிக்கெட் உலகப் புகழ் பெற்ற விளையாட்டு. அதில் பங்கேற்கும் வீரர்களின் உயிர்கள் மட்டுமல்ல, அதைக் காண வரும் லட்சக்கணக்கான பொதுமக்களின் உயிர்களும் பாதுகாக்கப்பட வேண்டியவை.
இந்த நேரத்தில் நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தலும் நடைபெறுகிறது. அகில இந்திய அளவில் இந்த தொடரை ஒரு மாதத்துக்கு தள்ளி வைத்து நடத்துவதால் எந்த நட்டமும் யாருக்கும் ஏற்பட்டுவிடாது.
அந்தந்த மாநில காவல்துறை தலைவரிடமிருந்து பாதுகாப்புக்கான ஒப்புதலை பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய உள்துறை மந்திரி தெரிவித்திருந்தாலும், என்னைப் பொறுத்தவரையில் மாநிலங்கள் மாத்திரமல்ல, இந்திய அளவில் அச்சுறுத்தல் இருக்கும்போது இந்த விஷப் பரிட்சையில் ஈடுபடக்கூடாது என்பதே என் கருத்தாகும்.
நடைபெற்ற பின் வருந்துவதை விட வரும் முன் காப்பதே சால சிறந்ததாகும் என்றார் கருணாநிதி.