நாளை சிபிஎம் தேர்தல் அறிக்கை வெளியீடு
டெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று டெல்லியில்நடந்தது. நாளை தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று நடந்தது. இதில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் தேர்தல் உத்திகள், கூட்டணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தேர்தல் அறிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது. நாளை தேர்தல் அறிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிடுகிறது.
முன்னதாக கூட்டத்தில் கலந்து கொண்ட மேற்கு வங்க மாநில சிபிஎம் செயலாளர் பிமன் பாசு கூறுகையில், இந்த முறை மேற்கு வங்கத்தில் கட்சிக்கு சற்று கடினமானதாகவே தேர்தல் இருக்கும்.
காங்கிரஸ் கட்சியின் கூட்டணி எப்படி அமையும் என்று தெரியவில்லை. இருப்பினும் காங்கிரஸும், திரிணமூல் காங்கிரஸும் ஓரணியில் வந்திருப்பது நிச்சயம் இடதுசாரிகளுக்கு சவாலானதுதான் என்றார்.
இன்றைய கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் இடதுசாரிகள் மேற்கொண்டு வரும் கூட்டணிகள் குறித்து இறுதி செய்யப்பட்டது.
நாளை வெளியிடப்படவுள்ள தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் முக்கிய அம்சங்கள், சொல்லப்பட வேண்டிய பிரச்சினைகள், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் குறைகள் உள்ளிட்டவற்றை எப்படி மக்களிடம் கொண்டு போவது என்பது குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
மொத்தம் 90 மத்திய குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர். நாளையும் மத்திய குழுக் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தின் இறுதியில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.
இன்றைய கூட்டத்தில் மேற்கு வங்கம், கேரளா மற்றும் திரிபுரா மாநில முதல்வர்களும் பங்கேற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications