பாஜகவின் பிரசாரம்: இன்று நாகர்கோவிலில் தொடங்குகிறார் அத்வானி
நாகர்கோவில்: பாஜகவின் நாடாளுமன்றப் பிரசாரத்தை அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரான எல்.கே.அத்வானி இன்று மாலை நாகர்கோவிலில் தொடங்குகிறார். இதையடுத்து நாகர்கோவில் விழாக்கோலம் பூண்டுள்ளது. பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
பாஜக தனது தேர்தல் பிரசாரத்தை இந்தமுறை தென் கோடி நகரான நாகர்கோவிலிலிருந்து தொடங்குகிறது. நாகர்கோவிலில் இன்று மாலை பாஜகவின் பிரமாண்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெறுகிறது.
நாகராஜா கோவில் திடலில் இந்தப் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், எல்.கே.அத்வானி சிறப்புரையாற்றுகிறார்.
இதற்காக அவர் இன்று மதியம் திருவனந்தபுரத்துக்கு விமானம் மூலம் வந்து அங்கிருந்து கன்னியாகுமரிக்கு காரில் வருகிறார்.
பிறகு சாமித்தோப்பு செல்லும் அத்வானி அங்கு அய்யா வைகுண்டர் தலைமைப் பதிக்குச் சென்று தரிசனம் செய்கிறார். பிறகு நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகை செல்லும் அத்வானி ஓய்வெடுக்கிறார்.
மாலை 5 மணி அளவில் பொதுக் கூட்ட மேடைக்கு வருகிறார்.
பொதுக் கூட்டத்தில், பா.ஜ.க அகில இந்திய செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், தேசிய செயலாளர் திருநாவுக்கரசர், தமிழக தலைவர் இல.கணேசன், துணைத்தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்டோர் பேசுகின்றனர்.
சோனியா காந்தி, அத்வானி ஆகியோருக்கு பயங்கரவாதிகளின் மிரட்டல் இருப்பதால் அவர்கள் அதிகபட்ச பாதுகாப்பு வளையத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.
எனவே நாகர்கோவிலில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி மாவட்ட போலீசாருடன், தேசிய பாதுகாப்பு படையினரும், பிற மாவட்ட போலீசாரும், சிறப்பு காவல் படை போலீசாரும் பாதுகாப்புப் பணிக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை சரக டி.ஐ.ஜி. கண்ணப்பன் நேற்று நாகர்கோவில் வந்து அத்வானி வருகையையொட்டி செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கபில்குமார் சி.சரத்கார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.