ஜீயர் கடத்தப்படவில்லை - சொந்த ஊருக்குப் போயுள்ளார்: திருச்சி போலீஸ்
திருச்சி: கொல்லப்பட்டதாக கூறப்பட்ட திருச்சி ஸ்ரீரங்கம் ஜீயர் சொந்த ஊரான கொல்கத்தாவில் பத்திரமாக இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த கோவிந்த ராமானுஜ தாசர் என்பவர் சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஹேபியஸ் ஹார்பஸ் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில்,
திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள பாலகாரி புருஷோத்தம ராமானுஜ ஜீயர் மடத்தின் தலைமை ஜீயராக லட்சுமண ராமானுஜ ஜீயர் இருந்து வருகிறார். கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி நான் ஜீயரை தரிசிக்க மடத்துக்கு சென்றேன். ஆனால் அங்கு அவர் இல்லை. அவரது பணிகளை பத்ரிநாராயணன் என்பவர் செய்து வருகிறார்.
பத்ரிநாராயணன் ஒரிசாவை சேர்ந்தவர். அவர் மடத்தில் இருக்கும் பல கோடி மதிப்பிலான சொத்துக்களை அபகரிக்கும் நோக்குடன் செயல்பட்டு வருகிறார். அவர் ஜீயரை மிரட்டி தனது பெயரில் மடத்தின் பவர் ஆப் அட்டார்னியை வாங்கி கொண்டுள்ளார்.
பத்ரிநாராயணன் மீது பெண்ணை கடத்தியாக ஏற்கனவே போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் ஜீயர், பத்ரிநாராயணனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் ஜீயரை காணவில்லை. அவரை கண்டுபிடிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் மற்றும் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டனர். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர்(பொறுப்பு) காந்தி, இன்ஸ்பெக்டர் சுகுமார் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ஸ்ரீரங்கம் லட்சுமண நாராயண ஜீயர் தனது சொந்த ஊரான கொல்கத்தாவில் இருப்பது தெரியவந்ததுள்ளது. மனுவில் குற்றசாட்டப்பட்டுள்ள பத்ரிநாராயணன் ஜீயரின் வளர்ப்பு மகளின் கணவர் என்பதும், இதன்மூலம் பத்ரிநாராயணன் அவரது மருமகன் என்பதும் தெரிய வந்துள்ளது.
தற்போது 83 வயதாகிவிட்டதால் ஜீயர், ஸ்ரீரங்கத்தில் இருந்து கடந்த 19ந் தேதி ரெயில் மூலம் கொல்கத்தாவிற்கு சென்றுள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஜீயரிடம் ஸ்ரீரங்கம் போலீசார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது தான் பத்திரமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications