இலங்கை வீரர்களைக் காத்த பஸ் டிரைவரின் தம்பி காஷ்மீர் தீவிரவாதி
லண்டன்: லாகூரில் நடந்த தீவிரவாதத் தாக்குதலின்போது, இலங்கை கிரிக்கெட் வீரர்களை சாதுரியமான முறையில் கடத்தப்படுவதிலிருந்து காத்து புகழ் பெற்று விட்ட பாகிஸ்தான் பஸ் டிரைவர் மெஹர் முகம்மது கலீலின் தம்பி, காஷ்மீரில் தீவிரவாத செயல்களில் பங்கேற்று இந்திய பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கலீலின் தம்பியான ஷகீல், 1995ம் ஆண்டு காஷ்மீரில் நடந்த தீவிரவாதிகளுடனான சண்டையின்போது, இந்திய பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற தகவலை டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி...
காஷ்மீரைச் சேர்ந்த ஒரு தீவிரவாத இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றிருந்தார் ஷகீல். மேலும், பாகிஸ்தான் முழுவதும் ஷரியா சட்டத்தை அமல்படுத்த வேண்டும், காஷ்மீரை விட்டு இந்திய ராணுவத்தை விரட்ட வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வரும் ஜமாத் இ இஸ்லாமி தீவிரவாத அமைப்பின் ஆதரவாளராகவும் விளங்கினார்.
1995ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் நடந்த தீவிரவாத வேட்டையின்போது இந்திய பாதுகாப்புப் படையினரால் ஷகீல் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தோளில் ஏ.கே.47 துப்பாக்கி, தலையில் தொப்பி, கையில் வாக்கி டாக்கி ஆகியவற்றுடன் தனது அண்ணன் கலீலை ஷகீல் வரவேற்பது போன்ற புகைப்படமும் கிடைத்துள்ளது.
ஷகீலுக்கு அப்துல்லா என்ற இன்னொரு பெயரும் உண்டாம் என்று டைம்ஸ் செய்தி கூறுகிறது.