பாஜகவுக்கு அடி - உறவை துண்டித்தது பிஜூ ஜனதா தளம்
புவனேஸ்வர்: பாஜகவுடன் கடந்த 11 ஆண்டுகளாக வைத்திருந்த கூட்டணி உறவை துண்டித்துவிட்டதாக பிஜூ ஜனதா தளம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி விட்டதையடுத்து கூட்டணிகளை இறுதி செய்யும் பணியில் பாஜக மும்முரமாகியுள்ளது.
உ.பியில் அஜீத் சிங்குடன் கூட்டணி உறுதியாகி விட்டது. இருப்பினும் சில சிக்கல்களையும் பாஜக சந்தித்து வருகிறது.
பீகாரில் ஐக்கிய ஜனதாதளத்துடன் இன்னும் தொகுதிப் பங்கீடு முடியாமல் இழுபறியாக உள்ளது. தமிழகத்தில் கூட்டணிக்கு ஆளே கிடைக்கவில்லை.
மகாராஷ்டிராவில் சிவசேனாவும் பிரதம வேட்பாளராக அத்வானியை ஏற்க முடியாது என அடம்பிடித்தது. தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி வைத்து கொள்ள போவதாக மிரட்டியது. பின்னர் ஒரு வழியாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. என்றாலும் தற்போது வரை இவர்களது கூட்டணி குறித்து எதுவும் உறுதியாக சொல்ல முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில் ஒரிசாவில் அரசியல் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. ஒரிசாவில் 21 நாடாளுமன்ற மற்றும் 147 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க இருக்கின்றன. இதற்கான தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன் மித்ரா மற்றும் ஒரிசா முதல்வரும், பிஜூ ஜனதா தள கட்சி தலைவருமான நவீன் பட்நாயக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்தது.
அப்போது பிஜூ ஜனதா தளம் சட்டசபையில் 100 தொகுதிகளுக்கு அதிகமாகவும், நாடாளுமன்ற தேர்தலில் 12 தொகுதிகளிலும் போட்டியிட போவதாக தெரிவித்துள்ளது. ஆனால், பாஜக சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகளில் நீங்கள் போட்டியிட்டால், நாடாளுமன்ற தொகுதிகளில் நாங்கள் அதிகம் போட்டியிடுவோம் என கறாராக கூறிவிட்டது. இதையடுத்து பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
இந்த நிலையில், கடந்த 11 ஆண்டுகளாக பாஜகவுடன் இருந்த தங்களது கூட்டணி உறவை முறித்து கொள்வதாக பிஜூ ஜனதா தளம் தெரிவித்துள்ளது. இது பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நவீன் பட்நாயக் கூறுகையில்,
பாஜகவுடனான தொகுதி பங்கீடு தோல்வியடைந்துவிட்டது. இதனால் தேர்தலை தனியாக சந்திக்க முடிவு செய்துள்ளோம். பாஜகவினர் சொல்லும் திட்டம் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை என்றார்.
அக்கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர் ஜெய் பான்டே கூறுகையில், பாஜகவுடனான தொகுதி பங்கீட்டில் எங்களுக்கு உடன்பாடு ஏற்படவில்லை. எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை தர மறுத்துவிட்டார்கள். ஒரிசா மக்களின் நலனை காக்க வேண்டிய முடிவை விரைவில் எடுப்போம். மூன்றாவது அணி குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது என்றார்.
ஜனாதிபதி ஆட்சி...
இந்நிலையில் ஒரிசா பாஜக சட்டசபை தலைவரும், தொழில்துறை அமைச்சருமான பிஷ்வபூசன் ஹரிசந்திரன் கூறுகையில், பிஜூ ஜனதா தளம் உறவை முறித்து கொண்டதை அடுத்து ஒரிசா சட்டசபையில் எங்களுக்கு இருக்கும் 30 எம்எல்ஏக்களின் ஆதரவை வாபஸ் பெறுவோம். அங்கு ஜனாதிபதி ஆட்சி கொண்டுவர கோருவோம் என்றார்.
பாஜக எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்றுவிட்டதை அடுத்து பிஜூ ஜனதா தளத்துக்கு தங்களது கட்சியின் 61 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே இருக்கிறது. பெரும்பான்மைக்கு 74 உறுப்பினர்கள் வேண்டும் என்பதால், ஆட்சி கவிழாமல் இருக்க அவர்களுக்கு கூடுதலாக 13 உறுப்பினர்கள் தேவைபடுகின்றனர்.
இருப்பினும், இடதுசாரிகள் (2), ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (4) மற்றும் சுயேட்சை (8) எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சியை காப்பாற்றிவிடலாம் என பட்நாயக் நம்புகிறார்.