புதுக்குடியிருப்பில் புலிகள் அதிரடி தாக்குதல் - 450 ராணுவத்தினர் பலி!
வன்னி: முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பின் முன்னணிப் பகுதியில் இலங்கை படையினரின் நான்கு டிவிஷன் வீரர்களின் மும்முனை முன்நகர்வுகள் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதோடு, ராணுவத்தினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்தச் சண்டையில் மட்டும் 450 வீரர்கள் பலியாகினர், 1272 பேர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் போர் கட்டளை மையம் தெரிவித்துள்ளதாவது:
விடுதலைப் புலிகளின் பலத்தை முடித்து விட்டதாக பெரும் பரப்புரையை இலங்கை படைகள் மேற்கொண்டு 'இறுதி நடவடிக்கை' என்ற பெயரில் மார்ச் முதல் தேதியிருந்து பெரும் அளவு தாக்குதல்களில் இறங்கியது. ராணுவத்தின் இந்த நகர்வுகள் அனைத்தையும் விடுதலைப் புலிகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பின் தென்பகுதியில் மந்துவில்-குழந்தையேசு கோவிலடி-பாண்டியன்வெட்டை ஆகியவை உட்ளடக்கிய மும்முனைகளில் இலங்கை படையினரின் கமாண்டோக்களைக் கொண்ட 53 ஆம் டிவிஷன், 58 ஆம் டிவிஷன், டாஸ்க் ஃபோர்ஸ் - 03, டாஸ்க் ஃபோர்ஸ் - 08 ஆகியன பெரும் வலுவுடன், அனைத்து விதமான நவீன போர்க் கருவிகளுடன் மேற்கொண்ட முன்நகர்வுகள் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டன.
இதில் இலங்கை படைத்தரப்பில் நேற்று வரை 450 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 1,272 பேர் காயமடைந்துள்ளனர்.
பெருமளவு படைக் கலங்களும் படையினரின் உடல்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இப்போது தீவிரமடைந்துள்ள சண்டையில் நாள்தோறும் 50 முதல் 60 வரையான படையினர் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இலங்கை தரைப்படையின் 53 ஆம், 57 ஆம், 58 ஆம் டிவிஷன், டாஸ்க் ஃபோர்ஸ் - 02, டாஸ்க் ஃபோர்ஸ்- 03, டாஸ்க் ஃபோர்ஸ் - 08 ஆகியன புதுக்குடியிருப்பு பகுதியில் நடவடிக்கையில் ஈடுபடும் நிலையில் விடுதலைப் புலிகள் படையினரின் சகல நடவடிக்கைகளுக்கும் தகுந்த பதிலடியைக் கொடுத்து அவற்றினை முறியடித்து வருகின்றனர்.
தமிழ் மக்களின் நிலங்களை விழுங்கும் சிங்களத்தின் கனவை தவிடு பொடியாக்கும் வகையில் விடுதலைப் புலிகளை தமிழ் மக்கள் பலப்படுத்திக் கொண்டு வருகின்றனர் என புதினம் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
66 தமிழர்கள் படுகொலை
இதற்கிடையே, பாதுகாப்பு வலையப் பகுதியில் உள்ள மாத்தளன் மருத்துவமனையில் மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 66 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 154 பேர் காயம் அடைந்தனர்.












Click it and Unblock the Notifications