மு.க.அழகிரிக்கு மதுரை சீட் கோரி அமைச்சர், மேயர் மனு
சென்னை: மு.க.அழகிரிக்கு மதுரையில் சீட் தர வேண்டும் என்று கோரி தமிழக அமைச்சர் தமிழரசி, மதுரை மேயர் தேன்மொழி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்து விண்ணப்பம் வாங்கினர்.
தி.மு.க. சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் மனு பெறுவது கடந்த 5-ந் தேதி தொடங்கியது.
இதையடுத்து அண்ணா அறிவாலயத்திற்குத் தொண்டர்களஅ பெருமளவில் வந்து விண்ணப்ப மனுக்களை வாங்கி வருகின்றனர்.
கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் சார்பில் அவர்களது ஆதரவாளர்கள் மனுக்களை வாங்கி வருகின்றனர்.
முதல்வர் கருணாநிதியின் மகனும், தி.மு.க. தென்மண்டல அமைப்பாளருமான மு.க.அழகிரி மதுரை தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றும், மாவட்ட தி.மு.க. சார்பிலும், அதே போல், மதுரை மாநகர் மாவட்டம், புறநகர் மாவட்டம் நிர்வாகம் சார்பிலும், மாமன்னர் மருதுபாண்டியர் பேரவை உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பிலும், ஏராளமானோர் மனு தாக்கல் செய்தனர்.
அமைச்சர் தமிழரசி, சோழவந்தான் எம்.எல்.ஏ. மூர்த்தி , மதுரை மேயர் தேன்மொழி, துணை மேயர் பி.மன்னன், முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, முன்னாள் மேயர் குழந்தைவேலு, மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி, பொருளாளர் மிசா.பாண்டியன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் அழகிரிக்காக மனுக்களை வாங்கினர்.
அழகிரிக்காக மனு வாங்க வந்தவர்கள் அழகிரியை வாழ்த்தி கோஷம் போட்டபடி சென்றதால் அண்ணா அறிவாலயம் பரபரப்பாக காணப்பட்டது.