மகளிர் தினத்தையொட்டி விஜயகாந்த், சரத்குமார் வாழ்த்து
சென்னை: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆகியோர் பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இன்று உலகெங்கும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
ஆண் பிள்ளைகளுக்கு கிடைக்கின்ற வாய்ப்புகள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பெண் பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை. பெண் பிள்ளைகளை பெரும் சுமையென்று பெற்றோர்கள் கருதுவதால் பெண் சிசுக்கொலை செய்கின்றனர்.
மேலும், கருவிலேயே கண்டுபிடித்து பெண்கருவை சிதைக்கின்ற போக்கும், கவலை தரத்தக்கது மட்டுமல்ல, களையப்பட வேண்டிய ஒன்றாகும். பெண்களை பெருமைப்படுத்திய வரலாறு தமிழ் சமுதாயத்திற்கு உண்டு.
பல துறைகளிலும் புறக்கணிக்கப்பட்ட பெண்கள் இன்று ஓரளவிற்கு உள்ளாட்சி மன்றங்களிலும், அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களிலும் பொறுப்பேற்று உள்ளது, திருப்தி தரக்கூடிய ஒன்றாகும்.
இருப்பினும், அவர்கள் ஆண்களுக்கு நிகராக பல துறைகளிலும் முன்னேற பெரும் பாடுபட வேண்டியுள்ளது. அவர்கள் மீது தனி அக்கறை செலுத்துவது உலக மகளிர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நன்நாளில் நமக்கு தாயாக, தாரமாக, அருமை மகளாக வாழ்க்கை முழுவதும் தங்களை தியாகம் செய்துகொள்ளும் பெண் சமுதாயம் முன்னேற, அனைவரும் பாடுபடுவோம் என்று தே.மு.தி.க. சார்பில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
சரத்குமார் விடுத்துள்ள செய்தியில்,
ஆணுக்குப் பெண் இளைத்தவரல்ல என்று நிரூபிக்கும் வகையில் அனைத்து துறைகளிலும் பெண்கள் ஈடுபட்டு முன்னேறி வருகின்றனர். ஆயினும், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளும், குற்றங்களும் நீக்கப்பட வேண்டும்.
சுயதொழில் மற்றும் தொழில் முனையும் பெண்களுக்கு மேலும் பொருளாதார ரீதியான சலுகைகள் கூடுதலாக கிடைக்கச் செய்யவும், நீண்ட நாளாக நிறைவேற்றப்படாமல் இருக்கும் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறவும், அடுத்து அமையவிருக்கின்ற பாராளுமன்றத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிச்சயம் உறுதியோடு செயல்படும். உலக மகளிர் தினத்தையொட்டி அனைத்து சகோதரிகளுக்கும் தாய்மார்களுக்கும் எனது அன்பான மகளிர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications