''இந்தியா ஆயுதம் தருவது பாமரர்களுக்கும் தெரியும்''
டெல்லி: இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவிகள் வழங்குவது பாமர மக்களுக்கும் தெரியும். இந்த விஷயத்தி்ல் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுகவும் பாமகவும் நீலிக் கண்ணீர் வடிக்கின்றன என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
அக் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா நிருபர்களிடம் பேசுகையில்,
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே தீவிர சண்டை நடந்து வருகிறது. அப்பாவி தமிழர்கள் சண்டைக்கு நடுவில் சிக்கி மனிதாபிமான உதவிகள் இன்றியும் அத்தியாவசிய பொருள்கள் கிடைக்காமலும் தவிக்கின்றனர்.
இலங்கை நிலவரம் கவலை அளிப்பதாக உள்ளது. பட்டினியாலும் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காமலும் ஏராளமான தமிழ் மக்கள் மடிகின்றனர். புலிகளுக்கு எதிரான சண்டையை நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருகிறது இலங்கை ராணுவம்.
சண்டையை நிறுத்துமாறு ராஜபக்சே அரசை மத்திய அரசு கோர வேண்டும். இனப்பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணும்படி வலியுறுத்த வேண்டும்.
இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்புகள் நியாயமானவை. அவர்களது கோரிக்கை இன்று நேற்றையதல்ல. அவர்களது எதிர்பார்ப்புகள், ஆசையை நிறைவேற்றும் வகையில் அரசியல் தீர்வு காணுமாறு இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.
விடுதலைப் புலிகளை ஒடுக்க பலவழிகளில் இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி அளிக்கிறது என்பது பாமர மக்களுக்கும் தெரிந்த உண்மை. இலங்கைக்கு வழங்கும் அனைத்து வகை உதவிகளையும் இந்தியா நிறுத்த வேண்டும்.
இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் மத்திய அரசு மோசமான கொள்கையை கையாண்டு வருகிறது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கொள்கையில் கூட்டணி கட்சிகளான திமுக, பாமகவுக்கும் பொறுப்பு உண்டு.
இலங்கை தமிழர்கள் நலனை பொருட்டாக கொள்ளாமல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செயல்படுகிறது.
மத்திய அரசில் அங்கம் வகித்து அதன் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருக்கும் திமுகவும் பாமகவும் தமிழகத்தில் மட்டும் இலங்கைப் பிரச்னை விஷயத்தில் நீலிக்கண்ணீர் வடிப்பது ஏன்? என்றார் ராஜா.