வெறும் 6 தொகுதிகள்-காங்கிரசுக்கு கதவை மூடிய சமாஜ்வாடி!
டெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு மேலும் கடுப்பேற்றும் வகையில், உ.பியில் 71 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது சமாஜ்வாடி கட்சி. ஆறு தொகுதிகளை காங்கிரஸுக்குத் தருவதாகவும் அது கூறியுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி மகா கடுப்பில் ஆழ்ந்துள்ளது.
மன்மோகன் சிங் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது காங்கிரஸுடன் நெருங்கி வந்தது சமாஜ்வாடி கட்சி. இதையடுத்து லோக்சபா தேர்தலையும் இணைந்து சந்திக்க இரு கட்சிகளும் முடிவு செய்துள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 80 லோக்சபா தொதிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவற்றை தனக்கு எடுத்துக் கொண்டு மிச்சம் மீதத்தை காங்கிரஸுக்குத் தர சமாஜ்வாடி முன்வந்தது.
ஆனால் கடுப்பான காங்கிரஸ் நிறைய தொகுதிளைக் கேட்டது. குறைந்தது 25 தொகுதிளைத் தர வேண்டும் என காங்கிரஸ் கேட்க, 17 தான் முடியும் என முலாயம் கறாராக கூறினார்.
இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த நிலையில் தடாலடியாக, 62 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை சமாஜ்வாடி கட்சி வெளியிட்டது.
இதையடுத்து, கோபமடைந்த காங்கிரஸ், சோனியா போட்டியிடும் ரேபரேலி, ராகுல் போட்டியிடும் அமேதி உட்பட 24 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கடந்த புதனன்று வெளியிட்டது
கடந்த 2004ம் ஆண்டு தேர்தலில் சமாஜ்வாடி கட்சி 40 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் 17 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் பா.ஜ. 11 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றன.
இந்த நிலையில் நேற்று மேலும் 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது சமாஜ்வாடி. இதன் மூலம் 71 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை சமாஜ்வாடி அறிவித்து விட்டது. இப்போது மிச்சம் இருப்பது 9 தொகுதிகள்தான்.
அதில், அமேதி, ரேபரேலி, கான்பூர், மதுரா, தனுரா, காஸியாபாத் ஆகிய 6 தொகுதிகள் மட்டுமே காங்கிரசுக்கு ஒதுக்க முடியும் என்று முலாயம் சிங் கூறியுள்ளார். இதுதவிர மீதமுள்ள அலிகார், பான்கான், துமுரியாகான் ஆகிய தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களை அறிவிக்கவுள்ளது சமாஜ்வாடி.
சமாஜ்வாடி கட்சியின் இந்த தடாலடி அறிவிப்பால் காங்கிரஸ் பெரும் கோபமடைந்துள்ளது. இனியும் கூட்டணிக்கான வாய்ப்பு இல்லை. 80 தொகுதிதளிலும் தனித்துப் போட்டியிட தயாராகி விட்டோம் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.