இலங்கைக்கு மருத்துவக் குழு - ஏமாற்றுவேலை: நெடுமாறன்
சென்னை: இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக மருத்துவக் குழுவை அனுப்புகிறோம் என்று மத்திய அரசு கூறியிருப்பது தமிழர்களை ஏமாற்றும் வேலை என்று இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்காக இந்தியாவிடம் இருந்து 52 பேர்களைக் கொண்ட இந்திய ராணுவ மருத்துவ குழு செல்ல இருக்கிறது என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் வடக்கு மாநிலத்தில் உள்ள கடலோர பகுதியில் அமைந்திருக்கும் புல்மோடை என்ற இடத்தில் மருத்துவமனை அமைத்து அங்கிருந்து மருத்துவ உதவி செய்யப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைக்கு இலங்கை ராணுவம் பாதுகாப்பு வழங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் முள்ளியவளை, வள்ளிப்புனம், விசுவமேடு, உடையார்கட்டு, மல்லாவி, புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் இருந்த மருத்துவமனைகளை சிங்கள ராணுவம் தாக்கி அழித்துள்ளது. ஏராளமான நோயாளிகளும், மருத்துவத்துறையை சேர்ந்தவர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
இருந்த மருத்துவமனைகளை அழித்த நிலையில் சிங்கள ராணுவத்தின் பாதுகாப்புடன் இயங்கும் இந்திய மருத்துவமனைக்கு தமிழர்கள் யாரும் வரமாட்டார்கள். அவ்வாறு வருவது அவர்களின் உயிர்களுக்கு அபாயத்தை விளைவிக்கும்.
நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டிய சூழ்நிலையின் காரணமாக தமிழக மக்களை ஏமாற்றுவதற்கு இத்தகைய அறிவுப்புக்களை இந்திய அரசு வெளியிடுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
உண்மையில் ஈழத் தமிழர்களுக்கு மருத்துவ உதவி செய்ய இந்தியா விரும்பினால், செஞ்சிலுவை சங்கம் அங்கு செயல்படுவதற்கு அனுமதிக்குமாறு இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும்.
செஞ்சிலுவை சங்கத்தினர் வெளியேற்றப்பட்டதையோ, மருத்துவமனைகள் அழிக்கப்பட்டதையோ இதுவரை கண்டிக்காத இந்திய அரசு இப்போது மருத்துவ உதவி செய்யப்போவதாக நாடகம் ஆடுவதை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் என்று கூறியுள்ளார் நெடுமாறன்.












Click it and Unblock the Notifications