பாமக கோட்டையை குறி வைக்கும் காங்-திமுக
அரக்கோணம்: பாமகவின் கோட்டையாக விளங்கும் அரக்கோணம் தொகுதி மீது திமுக, காங்கிரஸ் ஆகியவையும் கண் வைத்துள்ளன.
அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி, திருத்தணி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் திருத்தணியும், காட்பாடியும் சமீபத்திய தொகுதி மறுவரையரைக்குப் பின் அரக்கோணம் தொகுதியில் இணைக்கப்பட்டவை.
அதே நேரத்தில் இந்தத் தொகுதியில் இருந்த பள்ளிப்பட்டு, செய்யாறு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் நீக்கப்பட்டுவட்டன.
இந்தத் தொகுதியில் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்களே அதிக அளவில் உள்ளனர். இதனால் எந்தக் கூட்டணியில் இணைந்தாலும் பாமக இந்தத் தொகுதியை நிச்சயம் கோரும்.
இத் தொகுதியில் அந்தக் கட்சியைச் சேர்ந்த ஜீவரத்தினம் 3 முறை வென்றுள்ளார். வீர வன்னியர் பேரவையை சேர்ந்த ஜெகத்ரட்சகனும் ஒருமுறை வென்றுள்ளார்.
தற்போது மத்திய ரயில்வே இணையமைச்சராக உள்ள வேலு இந்த தொகுதியில் தான் கடந்த முறை பாமக சார்பில் வென்றார்.
திமுக கூட்டணியில் பாமக இணையாவிட்டால் இந்தத் தொகுதியை திமுகவே எடுத்துக் கொள்ளவும், இதை ஜெகத்ரட்சகனுக்கு ஒதுக்கி அவரை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடச் செய்யவும் வாய்ப்புள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர்.
அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியில் உள்ள வன்னிய சமூகத் தலைவர்களும் இந்தத் தொகுதியின் மீது கண் வைத்துள்ளனர். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் தங்கபாலு, மூத்த காங்கிரஸ் தலைவர் அன்பரசு ஆகியோர் இதில் முக்கியமானவர்கள்.
பாமக கூட்டணிக்கு வராவிட்டால் இந்தத் தொகுதியை நாம் பெற வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையிடம் கோரி வருகின்றனர் இந்தத் தலைவர்கள்.
அதே நேரத்தல் பாமக எந்தக் கூட்டணிக்குப் போனாலும் இந்தத் தொகுதியை விட்டுக் கொடுக்க வாய்ப்பி்ல்லை. இங்கு வேலுவோ அல்லது முன்னாள் ரயில் இணையமைச்சர் ஏ.கே.மூர்த்தியோ, அல்லது மாவட்டத் தலைவர் கலையரசனோ பாமக சார்பில் போட்டியிடலாம்.
அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் வாசு, முன்னாள் எம்பி கோபால் உள்ளிட்ட பலரும் இந்தத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications