லோக்சபா தேர்தல் சீட் - தேமுதிகவில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்பும் தேமுதிகவினர் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப மனுக்கள் இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
இது குறித்து கட்சியின் பொது செயலாளர் சொ.ராமுவசந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தே.மு.தி.க. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் 9-ந் தேதி காலை 10 மணி முதல் விண்ணப்ப படிவங்களை தலைமை கழகத்தில் நேரில் வந்து பெற்று கொள்ளலாம்.
பொது தொகுதிக்கு ரூ. 10,000
தமிழ்நாட்டில் பொது தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் ரூ.10 ஆயிரமும், தனி தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் 5 ஆயிரம் ரூபாயும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் ரூ.10 ஆயிரமும் விண்ணப்ப கட்டணமாக, தே.மு.தி.க. சென்னை-107 என்ற பெயரில் டி.டி.யாக (காசோலை) செலுத்த வேண்டும்.
22ம் தேதிக்குள் ..
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 22-ந் தேதி மாலை 5.30 மணிக்குள் தலைமை கழகத்தில் சேர்ப்பிக்க வேண்டும். அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறுதலும் நடைபெறும்.
யார், யார் போட்டியிடலாம்?
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாகவுள்ள அனைவரும் மற்றும் கட்சியின் அனைத்து பிரிவு அணிகளை சேர்ந்தவர்களும், கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றவர்கள் என அறிவிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார் ராமு வசந்தன்.