விதிமீறல்-புதுவை உள்ளாட்சி இயக்குனருக்கு நோட்டீஸ்!
புதுச்சேரி : தேர்தல் விதிமுறை மீறியது தொடர்பாக விளக்கம் தருமாறு, புதுச்சேரி உள்ளாட்சித்துறை இயக்குனர் மற்றும் பாப்ஸ்கோ மேலாண் இயக்குனர் ஆகியோருக்கு தேர்தல் அதிகாரி ராகேஷ் சந்திரா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. இதையடுத்து புதிய திட்டங்கள் துவங்குவது போன்றவைக்கு தடை விதிக்கப்ப்டடுள்ளது.
இந்த நிலையில் கடந்த மார்ச் 3 மற்றும் 4ம் தேதிகளில் புதுச்சேரி உள்ளாட்சி துறை வழங்கப்பட்ட நிதி மூலம் சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி சில தொகுதிகளில் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் பாப்ஸ்கோ மூலம் இலவச கேஸ் அடுப்பு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது. இது குறித்த செய்திகள் பத்திரிகைகளில் வெளியானது. இதனைத் தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜேஷ் சந்திராவிற்கு புகார்கள் சென்ற வண்ணம் இருந்தது.
இப் புகார்களின் அடிப்படையில் உள்ளாட்சித் துறை இயக்குனர் பாலசுப்பிரமணியம், பாப்ஸ்கோ மேலாண் இயக்குநர் வசந்தகுமார் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு ராகேஷ் சந்திரா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.