எழும்பூர் நீதிமன்ற நீதிபதி கார் கண்ணாடி உடைப்பு
சென்னை: சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சிங்காரவேலர் மாளிகையில் இருக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மனோகர். இவரது வீடு எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள நீதிபதிகளின் குடியிருப்பில் உள்ளது. இங்கு காரை பார்க்கிங் செய்ய தனியிடம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு நீதிபதி மனோகர் தனது மாருதி காரை இங்கு நிறுத்தி வைத்துவிட்டு சென்றார்.
காலையில் வந்து பார்த்த போது அவரது காரின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவர் எழும்பூர் போலீசில் இது தொடர்பாக புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதியின் கார் தாக்கப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அக்கம்பக்கத்து வீட்டாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தலைமை நீதிபதி கோகலே பதவியேற்றார்:
இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஹேமந்த் லட்சுமண் கோகலே இன்று காலை பதவியேற்றார்.
ராஜ்பவனில் உள்ள தர்பார் ஹாலில் காலை 9.30 மணிக்கு நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உயர்நீதிமன்றத்தில் வரவேற்பு ..
இதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 12.30 மணியளவில் உயர்நீதிமன்றத்திற்கு வருகிறார் தலைமை நீதிபதி கோகலே. அவருக்கு அங்கு வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு அளிக்குமாறு ஏற்கனவே உயர்நீதிமன்றப் பதிவாளர் மாலா தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதை ஏற்று தமிழக அரசு ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பை வழங்கியுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் நான்கு வாயில்களிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications