தமிழீழ ஆதரவு பயணம் நிறைவு-சேலத்தில் மாநாடு
சேலம்: இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் குறித்து விளக்கியும், காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று வலியுறுத்தியும் கடந்த மாதம் 25ம் தேதி தஞ்சையில் தொடங்கி இளந்தமிழர் இயக்கத்தின் சார்பில் நடந்த தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம், சேலத்தில் நிறைவுற்றது.
சேலம் போஸ் மைதானத்தில் நடந்த இந்த மாநாட்டில் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன் என திரட்டப்பட்ட 1 லட்சம் கையெழுத்துகள் முன்வைக்கப்பட்டன. பெரியார் திகவின் இசைக்குழுவினர் இசை நிகழ்ச்சியுடன் மாநாடு ஆரம்பமானது.
மாநாட்டிற்கு இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில், இளந்தமிழர் இயக்கம் கட்சி சாராது தமிழ் இனத்தின் நலம் சார்ந்த மாணவர், இளைஞர் அமைப்பாகவே விளங்கும் என்றும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களிக்காதீர் என்று விரிவாக பிரச்சாரம் நடத்தப்படும் என்றார்.
இளந்தமிழர் இயக்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் நல்லதுரை, வழக்கறிஞர் செபா, ம.செந்தமிழன் உள்ளிட்டோர் உரையாற்றினர். பயணத்தின் போது ஏற்பட்ட அனுபவங்களையும் காங்கிரசுக்கு எதிராக மக்களிடம் உருவாகியுள்ள மனநிலை பற்றி எடுத்துக் கூறினர்.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை கு.ராமகிருட்டிணன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு, பசுமை விகடன் எழுத்தாளர் தூரன் நம்பி, ஓவியர் புகழேந்தி உள்ளிட்டோரும் பேசினர்.
ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமாரின் பாட்டி மற்றும் சீனிவாசனின் மனைவி ஆகியோருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. முத்துக்குமாரின் கட்டளை எதுவோ அதனை நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என முத்துக்குமாரின் பாட்டி கண்ணீர் உரையாற்றினார்.
முத்துக்குமாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என இளந்தமிழர் இயக்கம் நிர்வாகக் குழுத் தீர்மானத்தை வழக்கறிஞர் நல்லதுரை அறிவித்தார்.
புலிகள் மீதான தடையை நீக்கி தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும், தமிழீழ ஆதரவாளர்கள் கொளத்தூர் மணி, சீமான் உள்ளிட்டோரை விடுதலை செய்யக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications