கரூரில் அதிமுகவினர் அடிதடி-விழா மேடையில் ரணகளம்
கரூர்: கரூரில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் இரண்டு கோஷ்டியினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் விழா மேடை அடித்து நொறுக்கப்பட்டது.
இலங்கை தமிழர் படுகொலைக் கண்டித்து பிறந்த நாள் விழா கொண்டாப்படுவதில்லை என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இருப்பினும் தமிழகம் முழுக்க ஜெயலலிதாவின் பிறந்த நாள் நிகழ்ச்சிகளை அதிமுகவினர் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கரூர் வஞ்சியம்மன் கோவில் தெருவில் 27 -வது வார்டு சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் கல்வெட்டில் பெயர் பதித்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர் கரூர் சின்னசாமியின் ஆதரவாளர் கவுன்சிலர் சீனிவாசனுக்கும், கரூர் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி தரப்பைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த சேர், நாற்காலி, டியூப் லைட், போன்றவைகள் அடித்து நொறுக்கப்பட்டன.
தகவல் அறிந்த கரூர் டிஎஸ்பி அரவிந்த், இன்ஸ்பெக்டர் தங்கவேல் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட பலர் திடீர் தலைமறைவாகிவிட்டனர்.
இதனால் கரூர் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.