வக்கீல்கள் போராட்டம்-சிறையில் இட நெருக்கடி
சென்னை: தமிழ்நாட்டில் தொடரும் வக்கீல்களின் போராட்டத்தால் சிறைச்சாலைகளில் கைதிகளை தொடர்ந்து அடைத்து வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 100 கைதிகள் இருக்க வேண்டிய இடத்தில் 200 கைதிகளுக்கு மேல் அடைக்கப்பட்டிருப்பதால் கைதிகள் மட்டுமல்லாமல் அவர்களை பாதுகாக்கும் போலீசாரும் திணறி வருகின்றனர்.
கடந்த பல நாட்களாக வக்கீல்கள் தொடர்ந்து நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் வருவதன் காரணமாக தமிழ்நாட்டு சிறைச்சாலைகள் ஸ்தம்பித்து போயுள்ளன.
இதனால், கைதிகளுக்கு உறைவிடம் மற்றும் கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தித் கொடுப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கைதிகளுக்கு இடையே ஒழுக்க குறைவும், சுகாதார கேடும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மத்திய மற்றும் கிளை சிறைச்சாலைகளில் சுமார் 15,000 ஆயிரம் கைதிகளை மட்டுமே அடைக்க முடியும். ஆனால் இங்கு 21,000 கைதிகள் அடைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் விசாரணை கைதிகள். கைது செய்யப்பட்டு ஒரிரு நாட்களில் வெளியில் வந்துவிட கூடியவர்கள். அவர்களும் தற்போது ஜாமீன் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
இதனால் தற்போது கீழ் நீதிமன்றங்களில் நீதிபதிகள், கைதிகளை தங்களது சொந்த ஜாமீனில் விடுதலை செய்து வருகின்றனர்.
75 கைதிகள் வரை அடைக்கக்கூடிய சைதாபேட்டை சிறையில் 122 பேர் இருந்தனர். இதையடுத்து அவர்களில் 49 பேர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
1,500 கைதிகள் மட்டுமே இருப்பதற்கு வசதி கொண்ட புழல் சிறையில் சுமார் 2,200 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஜாலியாக சுற்றும் குற்றவாளிகள்:
சிறைசாலைகளில் நிலைமை இப்படி இருப்பதால் போலீசாரும் புது குற்றவாளிகளை கைது செய்ய தயங்குகின்றனர். அப்படியே கைது செய்தால் கூட தங்களது சொந்த ஜாமீனில் விட்டு விடுகின்றனர்.
சென்னை கேகே நகர், விஜயராகப்புரத்தை சேர்ந்த வக்கீல் சரவணன் என்பவரை நேற்று இரவு 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களுடன் விரட்டியது. அவர்களிடம் இருந்து தப்பித்த சரவணன் கேகே நகர் போலீசில் புகார் கொடுத்தார்.
விசாரணையில் அந்த கும்பலில் இருந்த வக்கீல் ஞானம், அரிகிருஷ்ணன், ஸ்டாலின் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவர் மீதும் 506-2வது பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் தங்களது சொந்த ஜாமீனில் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
வழக்கமாக இப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டால் நீதிபதி முன்பு ஆஜர்படுத்த வேண்டும். ஆனால், போலீசார் சிறையில் இருக்கும் கூட்ட நெரிசல் காரணமாக இதை செய்திருப்பதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications