சோனியா குறித்து அவதூறாகப் பேசியதாக காமெடி நடிகர் மீது வழக்கு
சேலம்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து அவதூறாகப் பேசியதாக வளர்ந்து வரும் காமெடி நடிகர் பெஞ்சமின் மீது சேலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆட்டோகிராப், திருப்பாச்சி, ஐயா உள்ளிட்ட பல படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளவர் பெஞ்சமின். சேலத்தைச் சேர்ந்தவர்.
கடந்த 4ம் தேதி சேலம் மாவட்டம் மேச்சேரியில் நடந்த இலங்கைத் தமிழர் ஆதரவு உண்ணாவிரதப் போராட்டத்தில் இவர் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசியதாக மேச்சேரி காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் போலீஸில் புகார் கொடுத்தார்.
அதேபோல உண்ணாவிரத போராட்டத்தில், சிவக்குமார் உள்பட 5 பேர் ரகளையில் ஈடுபட்டு நாற்காலியை உடைத்ததாக, தமிழர் தேசிய இயக்கத்தை சேர்ந்த வக்கீல் செந்தில் குமார் மேச்சேரி போலீசில் புகார் செய்தார்.
இரு புகார்களின் பேரிலும் பெஞ்சமின் மற்றும் சிவக்குமார் உள்ளிட்ட 6 பேர் மீது மேச்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications